கவிதைக்காரர்கள் வீதி




ஊருக்கே
குப்பைத் தொட்டியானது
வற்றிய குளம்.

வெளிநாடு பயணம்
பாலுக்கு
பேப்பருக்கு
கேபிளுக்கு
பார்த்துப் பார்த்து
சொல்லியாச்சு
வந்து போகும்
அணிலுக்கும் குருவிக்கும்
எப்படி சொல்வது

கடைசிப் பேருந்தை
தவற விட்டவனுக்கு
துணை வருகிறது
தனிமையும், நிலவும்

ரயில் பயணம்
பயணிகளுக்கு
பார்வையற்றவரின்
புல்லாங்குழல் இசை
அவருக்கு
விழுகிற காசின் ஓசை

வெகு நாள் கழித்து
சந்தித்த பள்ளி நண்பன்
கிளறிவிட்டுச் சென்றான்
பால்யத்தின் நினைவுகளை

தடம் மாறி வந்த
பறவையொன்று
சிறகாக விட்டுச்சென்றது
தன் தடயத்தை

பேருந்தின்
அனைத்து
ஜன்னலோர இருக்கைகளிலும்
இடம் பிடித்திருந்தது
மழை

நா.கோகிலன்