மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீ அரவிந்த அன்னை

என்னுடைய குழந்தை யாரும் பூஜ்யமாக இருக்க முடியாது. உண்மையில் என்னுடைய குழந்தை ஒவ்வொன்றுக்கும் அதற்கென்று ஓர் இடம் உண்டு. அதற்கென்று நிறைவேற்ற வேண்டிய ஒரு தனிக் குறிக்கோள் உண்டு. நான் அனைவரிடமும் சமமாகவே அன்பு செலுத்துகிறேன். தனி விருப்பமோ பாரபட்சமோ இன்றி ஒவ்வொருவருடைய நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உண்மையிலேயே தேவைப்படும் அனைத்தையும் செய்கிறேன்.

- ஸ்ரீஅன்னை

பால் ரிச்சர்ட் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். நாளை சொந்த நாட்டுக்குப் பயணம் என்கிறபோதே மனம் கொஞ்சம் மகிழ்ச்சி, நிறைய கவலை என்று சடுகுடு ஆடியது.ஏன் மகிழ்ச்சி?என்ன கவலை?மகிழ்ச்சிக்குக் காரணம், மிராவைப் பார்க்கப் போகிறோம்... அவளது கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது.வருத்தம்?அரவிந்தர் என்கிற அற்புதமான மகானை தரிசித்துவிட்டு உடனே பிரிய முடியுமா என்ன? அவரோடு செலவழித்த நாட்கள் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால், அது பல ஜென்ம காலமாகத் தவமிருந்து கிடைத்த வரம் போன்ற உணர்வை அல்லவா ஏற்படுத்தியுள்ளது.

ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி வானம் பார்த்தார். இலக்கில்லாமல் நகரும் மேகக் கூட்டம் போன்று அவரது மனமும் கலைந்து சுழன்று நகர்ந்து கொண்டிருந்தது. ‘நான் இங்கேயே இருந்துவிடக் கூடாதா? அரவிந்தரின் பாதத்தில் அமர்ந்து அவரிடமிருந்து பொங்கும் அருள் அமுதத்தை தினமும் பருகும் வாய்ப்புதான் எத்தனை பேரானந்தம்.

’மனம் ஆசைகளை அடுக்கியபோதே இன்னொரு பக்கம் கடமைகளையும் நினைவுபடுத்தியது.‘இப்போது முடியாது. வந்திருப்பது அரசு முறைப் பயணம். முக்கியமான கடமைகள் இருக்கின்றன. மீண்டும் நிச்சயம் வரலாம். வந்தே ஆக வேண்டும்.’ - அதுவே சமாதானமும் சொல்லிக்கொண்டது.

ரிச்சர்ட் கப்பல் ஏறினார். நகர்ந்துகொண்டிருந்த கப்பலில் நின்று இந்தியாவின் நிலப்பரப்பைப் பார்த்தார்.அவரது கண்களில் நீர் திரண்டது. காட்சி மெல்ல மங்கியது. விழிகளில் திரண்ட நீர் கன்னத்தில் வழிந்தோடிய போது கைக்குட்டையால் துடைத்துக்கொண்டார். இந்தியாவை காதல் பொங்கப் பார்த்தார். ஆஹா... இதுவல்லவா கர்ம பூமி! இங்கு பிறப்பதுதான் எத்தனை பெரிய வரம். கிருஷ்ணனின் நினைவால் வாடும் ராதையைப் போன்று இந்தியா மீதும் அரவிந்தர் மீதும் பேரன்பு பொங்கியது ரிச்சர்டுக்கு.

அன்பு என்கிறபோதே, எப்படி அன்பு காட்ட வேண்டும் என்று காஸ்மிக் கூட்டத்தில் மிரா பேசியது நினைவுக்கு வந்தது.‘‘ஒருவன் இன்னொரு மனிதன் மீது அன்பு வைக்கும்போது பொதுவாக செய்யும் முதல் தவறு அந்த மனிதன் தன் மீது பதிலுக்கு அன்பு செலுத்த வேண்டும்; தன்னுடைய வழியில் தன்னுடைய ஆசைகளைத் திருப்தி செய்யும் வழியில் அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்புவது தான். இதுவே மனிதர்களின் துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் துன்பங்களுக்கும் முதல் காரணம்.

அன்பு கொள்ளுதல் என்றால் அது பேரம் பேசாமல் தன்னைக் கொடுப்பதுதான். இல்லை என்றால் அது அன்பு அல்ல. ஆனால், மனிதர்கள் அரிதாகவே இதை உணர்கிறார்கள். வாழ்க்கையில் அதன்படி நடந்துகொள்கிறவர்கள் அதை விடவும் அரிது. அதன் பின்விளைவுகள் வேதனை தருவதாக உள்ளன.

ஒருவன் இறைவனை உண்மையாகவும் முழுமையாகவும் நேசிக்கும்போது அவன் அவனுடைய சிருஷ்டியையும் அவன் சிருஷ்டித்த ஜீவராசிகளையும் நேசிப்பான். அவன் படைத்த ஜீவராசிகளில் சிலவற்றுடன் அதிக நெருக்கத்தை உணர்வான். அவற்றை விசேஷமாக நேசிப்பான் என்பது தெரிந்ததே. இந்த அன்பு சாதாரண மனிதனின் அன்பு போல சுயநல அன்பு அல்ல.

இது ‘பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும், சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்’ என்று ஆசைப்படும் அன்பு அல்ல; இது பிரதிபலன் எதையும் எதிர்பாராது தன்னைக் கொடுத்திடும் அன்பு. அன்பு செய்வதிலுள்ள ஆனந்தத்திற்காகவே அன்பு செய்வதுதான் அமைதிக்கான, சந்தோஷத்திற்கான, வாழ்க்கைக்கான நிபந்தனை.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எல்லாவற்றிலும் உள்ள இறைவனை நேசித்தல், இத்தகைய இறைவன் விரும்புவதொன்றையே விரும்புவது என்ற நிலையை அடையும் போது பூரண சாந்தி நிலவும்!’’

‘மிராவுக்குத்தான் எத்தனை மெல்லிய இதயம். அவருள் பொங்கித் ததும்பும் அன்புதான் எத்தனை அழகாய் அனைவரது கண்ணீரையும் ஆனந்தமாய் மாற்றுகிறது. அறிவும் அன்பும் கை கோர்த்து நிற்கும் கம்பீரம் மிராவுடையது’ - மிராவின் நினைவு ரிச்சர்டை இன்னும் நெகிழ வைத்தது. ‘மிரா... நான் வருகிறேன்.

இந்தியா என்னை உணர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது. ஒரு அற்புதமான ஞானியை தரிசித்தேன். அந்த அனுபவத்தைச் சொல்வது என்பது சாமானியமல்ல; நீயும் அனுபவித்தால்தான் தெரியும்.’ வாய்விட்டுச் சொல்லிக்கொண்டார்.

அன்றைய பொழுது மெல்ல கழிந்தது. இரவு உணவருந்தினார். கண்ணயர்ந்தார். அவரது மனம் மட்டும் தேனருந்திய பின் மலரிலேயே மயங்கித் துயிலும் வண்டு போல அரவிந்த நினைவில் ஆழ்ந்து கரைந்தது. பொழுது புலர்ந்தது.

இளஞ்சூரியனின் பொன்னொளி கிரணங்கள் கடல் நீரில் பட்டு வர்ண ஜாலம் நிகழ்த்திக் கொண்டிருந்தது. கரையே தெரியாது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீலக்கடல். கடல் தாண்டும் பறவைக் கூட்டம் இளைப்பாறுதலுக்காக கப்பலின் மேல் தளத்து மரத்தூண்களில் அமர்ந்திருந்தன.

கையில் கோப்பைத் தேனீருடன் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் ரிச்சர்ட்.மனம், ‘ஞானம் என்றால் என்ன?’ என்கிற கேள்வியை எழுப்பியது.இதற்கு அரவிந்தர் என்ன பதில் சொல்வார்? மானசீகமாக அவரது மலர் முகத்தை மனதில் நிறுத்தினார்.அரவிந்தம் மெல்ல மலரத் தொடங்க, ரிச்சர்டின் மனதுள் பதில் பூக்கத் தொடங்கியது.

‘உணர்விலே வளர்ச்சி ஏற்படும்போதுதான் ஆன்மிக விஷயங்களைப் பற்றி கொஞ்சமாவது நேரடியான ஞானம் பெற முடியும். ஆனால், அவ்வாறு ஞானம் பெற மனம் மோனமடைந்து அதனிடத்தில் நேரடி அனுபவமும் உள்ளொளியும் வரவேண்டும்.

தெய்வ சக்திக்குத் தன்னைக் கொடுக்கவும், அதன் வேலையில் நம்பிக்கை வைக்கவும் முடியவில்லை என்றால் ஒருவனால் இந்த யோகத்தைச் செய்ய முடியாது. அவன் தனது மனத்திலும் அது எழுப்பும் கேள்விகளிலும் அதன் கருத்துக்களிலுமே வாழ்ந்தால் யோகம் சாத்தியமில்லை.

அவனால் மனத்தை அமைதியுறச் செய்யவும், தனது சக்தியை விட வலிமையுடைய தெய்வ சக்தி தன்னுள் வேலை செய்வதை உணரவும், அதை நம்பவும், அதன் செயல்களுக்கு எதிராகச் செல்பவைகளை எல்லாம் விலக்குவதன் மூலம் அதற்குத் துணை நிற்கவும் முடிய வேண்டும். அதுவே இந்த யோகம் செய்வதற்குத் தகுதி உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்கான உரைகல்.

ஒருவன் தெய்வ உணர்வில் கரையும்போது நீங்காத அமைதியும், நீங்காத வலிமையும் உணர்கிறான். அனந்தத் தன்மையில் மட்டுமன்றி நித்தியத்தன்மையிலும் வாழ்கிறான். தனது அமர நிலையை உணர்கிறான். ஆகவே, உடலின் மரணத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை. மேலும், அவன் எல்லாப் பொருள்களிலும் கோயில் கொண்டுள்ளவனை உணர்கிறான். எல்லாம் பிரம்மனின் விளக்கமாகவே தெரிகிறது.

அகங்காரம் நீங்கி இதயமும் தூயதானபொழுது செயல்களெல்லாம் அந்தராத்மாவின் ஆணைகளிலிருந்தும் ஆன்மாவின் சிகரங்களிலிருந்து அல்லது ஆழங்களிலிருந்தும் வரும். இதுவரை நமது இதயத்துள் ரகசியமாய் இருந்த ஜீவநாதனே நேரே வெளிப்படையாக செயல்களை நடத்துவான்.

செயல்கள், நம்பிக்கைகள் சம்பந்தமான எல்லா வழக்கமான வழிகளையும், புறத்தேயிருந்து விதிக்கப்படும் எல்லா ஒழுக்க விதிகளையும், புற இயற்கை உருவாக்கிய அனைத்தையும் - அறங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு இறைவன் ஒருவனையே சரண்புகு என்பதே கீதை யோகிக்குக் கூறும் முடிவான, உத்தமமான ரகசிய வார்த்தை.

ரிச்சர்ட் வியப்பின் உச்சிக்கே போனார். மனதால் கேட்கும் கேள்விக்கு இந்த மகானால் மனதாலேயே பதில் தரமுடிகிறதே என்று வியந்து நின்றார். மெல்ல கண் மூடி, மானசீகமாக அரவிந்தரின் பாதம் பற்றினார். ரிச்சர்டின் மனதில் மெல்ல ஒரு மொட்டு இதழ் விரித்தது. அந்த தாமரையில் அரவிந்தரின் அழகு முகம் தெரிந்தது. அது அப்படியே மிராவாய் மாறியது? என்ன காட்சி இது?

மாதங்களில் இன்று

மார்கழி

ஆண்டின் ஒன்பதாவது மாதம். சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிப்பார். இம்மாதத்தின் தமிழ்ப் பெயர் ‘சிலை’. சூரியனுடைய கதிர்நகர்வு தெற்குப் பாதையில் (தட்சிணாயணம்) முடியும் மாதம். இம்மாதத்தில் பனி அதிகமாக இருக்கும். பகவான் கிருஷ்ணன், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என பெருமைப்படுத்திய மாதம் இது.

தை

ஆண்டின் பத்தாவது மாதம் இது. சூரியன் மகர ராசியில் சஞ்சரிப்பார். இம்மாதத்தின் தமிழ்ப் பெயர், ‘சுறவம்’. சூரியனுடைய கதிர்நகர்வு வடக்குப் பாதையில் (உத்தராயணம்) தொடங்கும் மாதம் இது. திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இந்த மாதத்தையே அதிகம் தேர்வு செய்வார்கள். தமிழருக்குரிய இரண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் இந்த மாதப் பிறப்பும் ஒன்று. புதுநெல்லை அறுவடை செய்து சூரியனுக்குப் படைத்து நன்றி சொல்லும் தமிழரின் பொங்கல் பண்டிகை இம்மாதத்தின் மகுடம்.

மாசி

ஆண்டின் பதினொன்றாவது மாதம். சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். இம்மாதத்தின் தமிழ்ப் பெயர், ‘கும்பம்’. பனிக்காலம் முடிந்து லேசாக வெயில் தெரிய ஆரம்பிக்கும். மகாசிவராத்திரி இம்மாதத்தின் ஆன்மிக விசேஷம்.

வரம் தரும் மலர்! சோம்பல் நீக்கும் பவளமல்லி!

செய்யும் தொழிலில் குடும்பத் தலைவர் சுறுசுறுப்பு காட்ட வில்லை என்றால் வீடு வறுமையில் வாடும். குழந்தைகள் படிப்பில் சோம்பல் பட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எதிலும் ஆர்வத்தோடு செயல்பட்டு வெற்றி பெற உதவுகிறது பவளமல்லி. முன்னிரவில் பூத்து மணம் பரப்பும் பவளமல்லியை அரவிந்த அன்னைக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள, சோம்பல் நீங்கி ஆர்வம் அதிகரிக்கும்; வெற்றி வீடு தேடி வரும்!

அன்னையின் அற்புதம்!

100 ரூபாய் தந்தால் 1000 அருளும் அன்னை!

‘‘வாழ்க்கை எனக்கு முன்னால் நிறைய சவால்களை வைத்திருந்தது. சொந்த வீடு இல்லை. நல்ல வேலையும் இல்லை. எதிர்காலம் குறித்த கவலையோடு நின்று கொண்டிருந்த என்னிடம், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் அன்னையின் திருவுருவப்படம் ஒன்றைக் கொடுத்தார். ‘‘இவங்களை கெட்டியா பிடிச்சிக்கோ. உன் வாழ்க்கை வசதி உயர்ந்துவிடும்’ என்றார். நான் அன்னையை வணங்கத் தொடங்கினேன். ஆச்சரியப்படும் விதமாக எல்லாம் நடந்தது.

மலர்களின் மூலமாக அன்னையின் அருளைப் பெற்று சொந்த வீடு, நல்ல மனைவி, நிம்மதியான வாழ்வு, எனக்கென சுய தொழில் என நிறைவாக வாழ்ந்து வருகிறேன். என்னை விட என் மனைவி வசந்தா அன்னையின் தீவிர பக்தையாகிவிட்டார். நான் அன்னைக்கு நூறு ரூபாய்க்கு பூ வாங்கி வைத்து வழிபட்டேனென்றால் அன்று அன்னை எனக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கச் செய்து விடுவார்!’’ என்று நெகிழும் சுரேஷ்குமார் - வசந்தா தம்பதி, அரவிந்த அன்னையின் முப்பது ஆண்டு கால பக்தர்கள்!

(பூ மலரும்...)

எஸ்.ஆர்.செந்தில்குமார்
ஓவியம்: மணியம் செல்வன்