காணாமல் போன காளவாசல்கள்!



பொங்கல் என்றால் இன்று நமக்கு கரும்பு, புத்தாடை, டி.வி சிறப்பு நிகழ்ச்சிகள், புதுப்பட ரிலீஸ்... அவ்வளவுதான். ஆனால், கடந்த தலைமுறைக் காலங்களில் பொங்கல் நெருங்கும்போதே வீட்டுக்கு வெள்ளையடிப்பதுதான் முதல் வேலை.

இதற்காக மார்கழி மாதத் துவக்கத்திலேயே மதுரையைச் சுற்றியிருக்கும் சுண்ணாம்புக் காளவாய்களில் மக்கள் கூட்டம் அலை மோதும். புத்தாடை அணிந்த மக்கள் போலவே, புதுவெள்ளை பூசிய வீடுகளும் கிராமங்களிலும் நகரங்களிலும் பளிச் தோற்றம் காட்டும். ஆனால், இன்று... வருடம்தோறும் வெள்ளையடித்தல் என்ற பழக்கமே இல்லை. மதுரையில் சுண்ணாம்புக் காளவாய்கள் கிட்டத்தட்ட இல்லை!

சிப்பிகளை அதீதவெப்பத்தில் கொதிக்க வைத்தால் கிடைப்பதே சுண்ணாம்பு. இதற்காக அமைக்கப்படும் விசேஷ அடுப்பு செட்டப்தான் சுண்ணாம்புக் காளவாய். ஒரு காலத்தில் வீடுகளுக்கு வெள்ளையடிக்க மட்டுல்ல, வீடுகளின் கட்டுமானப் பணிகளுக்கே சுண்ணாம்பு, கருப்பட்டி, பதநீர் பாகு ஆகியவை கலந்த சுண்ணாம்புக்காரை என்ற கலவைதான் பயன்படுத்தப்பட்டது. ஆக, தமிழகம் முழுக்க எவ்வளவு தேவை இருந்திருக்கும்? அத்தனையையும் சமாளித்தவை உள்ளூர் சுண்ணாம்புக் காளவாய்கள்தான்.

பெருநகரங்களில் மட்டுமின்றி, சின்னச் சின்ன கிராமங்களிலும் இப்படிப்பட்ட சுண்ணாம்புக் காளவாய்கள் ஒன்றிரண்டாவது இருக்கும். பேச்சுநடையில் இதை ‘காளவாசல்’ என்கிறார்கள்.‘‘மதுரை அழகர்கோயில் சாலையில 20 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் 10க்கும் மேற்பட்ட காளவாசல் இருந்துச்சுங்க. மக்கள் டிஸ்டம்பருக்கு மாறிட்டாங்க என்பது ஒரு பக்கம்... சுற்றுச்சூழலுக்கு பாதிப்புன்னு சொல்லி நல்லா நடந்துக்கிட்டிருந்த சில சுண்ணாம்பு காளவாசல்களையும் மூட வச்சிட்டாங்க. எல்லா தடைகளையும் தாண்டி இப்ப ஒண்ணு, ரெண்டு பொழச்சு கெடக்கு!’’ என வருத்தத்தோடு துவங்குகிறார் மதுரையைச் சேர்ந்த பாண்டியன்.

‘‘10 முதல் 15 அடி உயரம் கொண்ட காளவாசலில் ஓடைக்கல்லு, கரித்துண்டு, பனங்கொட்டை, தேங்காய் மட்டை, தென்னை மட்டைனு எரிபொருட்களைப் பயன்படுத்தி சுண்ணாம்பை வேக வைப்பாங்க. காலை 4 மணிக்கு பத்த வைக்கிற நெருப்பு, அடுத்த நாள் காலை 4 மணி வரை எரியும். அப்படி எரிஞ்சாதான் வேக வைக்கப்பட்ட நல்ல சுண்ணாம்பு கிடைக்கும். நார்க்கூடையில அதை சுடச்சுட அள்ளிப் போடுவாங்க.
அதை வாங்கிட்டுப் போயி தண்ணியில போட்டா, ஆசிட் மாதிரி கபகபனு கொதிக்கும். அந்தக் கொதி அடங்கினதும் கலர் சேர்த்து சுவத்துக்கு அடிக்க வேண்டியதுதான். இப்ப தண்ணியில குளோரின் பவுடர் சேர்க்குறாங்களே... அது செய்யிற கிருமி நாசினி வேலையை அந்தக் காலத்துலயே சுண்ணாம்பு செஞ்சுது. அதனால வீட்டுக்கு தனியா கிருமிநாசினின்னு ஒண்ணு தேவைப்படலை.

இப்ப பெயின்ட், டிஸ்டம்பர் விக்கிற விலையில கல்யாணம் காட்சி வந்தாதான் வீட்டுக்கு வெள்ளையடிக்கறதுனு ஆகிப் போச்சு. வருஷம் தவறாம வெள்ளையடிச்சா அந்த வீட்டுல பூச்சிப் பொட்டு அண்டாது. நோய் நொடி வராது. அப்புறம் செல்வம் பெருகித்தானே ஆகணும்?’’ என்கிறார் பாண்டியன் கலகலப்பாக!

மதுரை புதூர் மூன்றுமாவடி கண்மாய் கரையோரம் 2 காளவாசல்கள் இயங்கி வந்திருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே ஒரு வீதிக்கு சுண்ணாம்புக்காரத் தெரு என்று பெயரே உள்ளது. மதுரை நகரத்தின் பிரதான பகுதி ஒன்றின் பெயரே காளவாசல். ஒரு காலத்தில் இப்பகுதியில் சுண்ணாம்புக் காளவாய்கள் நிறைந்து இருந்தனவாம்.

இப்போது அவற்றில் ஒன்று கூட இல்லை. இதையொட்டியுள்ள பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மூன்று காளவாசல்கள் இயங்கிக் கொண்டிருந்தன. சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி அவை அகற்றப்பட்டுவிட்டன. தத்தனேரி, குலமங்கலம், செல்லூர், புதூர், மூன்றுமாவடி, கடச்சனேந்தல் என பல இடங்களில் இருந்த காளவாசல்களைக் காணவில்லை. அத்திபூத்தாற் போல தெப்பக்குளம், கோயில் பாப்பாக்குடி உள்ளிட்ட சில இடங்களில்தான் காளவாசல்கள் இயங்கி வருகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்களின் நிலை ரொம்பவே பரிதாபம்.

‘‘ஒரு காலத்துல பொங்கல் மட்டுமில்லாம, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் மக்கள் சுண்ணாம்புக் கல் வாங்கி வெள்ளையடிச்சாங்க. இப்போ டிஸ்டம்பர், வார்னீஷ், எமல்ஷன்னு மாறின பிறகு இந்தத் தொழிலுக்கு மவுசே இல்லாமப் போச்சு!’’ எனக் கலங்குகிறார்கள் அவர்கள்.

‘‘இப்ப இங்க தயாராகுற சுண்ணாம்பு எல்லாமே செங்கல் தயாரிப்புக்குப் பயன்படுது. கோழிப்பண்ணை, பட்டுப்புழு வளர்க்குற இடங்கள்ல கிருமி நாசினியாவும், தென்னை மரங்களை கரையான் அரிப்புல இருந்து தடுக்கவும், வெத்தலையோட சேர்த்துப் போடவும் வாங்குறாங்க. முன்னாடி படி, பக்கா, மரக்கானு அளந்து வித்தோம்.

இப்போ 25 கிலோ மூ(ட்)டை 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை போகுது. ஏற்கனவே நசிஞ்சுக்கிட்டிருக்குற தொழிலை சுற்றுச்சூழல் மாசுபடுதுனு சொல்லி விரட்டுறாங்க. ஊருக்குள்ளேயே சுடுகாட்டுல பிணம் எரிக்கிறாங்க. தெருவுக்குத் தெரு டாஸ்மாக் தொறக்குறாங்க. ஆனா, காளவாசல் மட்டும் இருக்கக் கூடாதுன்னா என்ன அர்த்தம்?

உயரமான புகை போக்கி வச்சி இந்தத் தொழிலை நடத்தலாம்னு அனுமதி தரணும். அப்போதான் கொஞ்சமாச்சும் இந்தத் தொழிலை புடிச்சி நிறுத்தி காப்பாத்த முடியும்!’’ - இதுவே இந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை!பேச்சு வழக்கில், ‘உன்னையெல்லாம் சுண்ணாம்புக் காளவாய்ல தள்ளிவிடணும்’ என்பார்கள் மக்கள். இப்படி சுண்ணாம்புக் காளவாய்களையே தள்ளிவிடலாமா?ஊருக்குள்ளேயே சுடுகாட்டுல பிணம்  எரிக்கிறாங்க. தெருவுக்குத் தெரு டாஸ்மாக் தொறக்குறாங்க. ஆனா, காளவாசல்  மட்டும் இருக்கக் கூடாதுன்னா என்ன அர்த்தம்?

- ப.கவிதாகுமார்
படங்கள்: ஜி.டி.மணிகண்டன்