நியூஸ் வே



* எல்லோரும் வைக்கப் பயப்படும் டைட்டில்களை வரிசையாக தன் படங்களுக்கு வைக்கிறார் விஜய் ஆண்டனி. அடுத்த படத்திற்கு ‘எமன்’ எனப் பெயர் சூட்டிவிட்டார். எடுத்து முடிக்கப் போகிற படத்தின் பெயர், ‘சைத்தான்’.

* அனிருத் கனடாவில் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவில்லை. அடுத்த காதலர் தினத்திற்கான பாடல்களுக்கு மியூசிக் கம்போஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்.

* டபுள் குஷியில் இருக்கிறார் வேதிகா. கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் அவர் நடித்த ‘ஷிவலிங்கா’ ரிலீஸ் ஆகியிருக்க, இன்னொரு பக்கம்
 இந்தப் புது வருடத்தை தன் அம்மாவுடன் துபாயில் கொண்டாடியிருக்கிறார் ஹேப்பியாக!

* ஃபிட்னஸில் மட்டும் கவனம் செலுத்தி வந்த காஜல் அகர்வால், இந்த ஆண்டு யோகா, மெடிட்டேஷனிலும் அக்கறை காட்டத் திட்டமிட்டுள்ளார். ‘‘ஷூட்டிங் பிரேக்கில் கூட யோகா ஈஸியா பண்ணிடலாம். ஜிம் போக வேண்டிய அவசியமிருக்காது!’’ என்கிறார் சிரித்தபடி!

*சச்சின் அவதாரம் என புகழப்படுகிறார் பிரணவ் தனவாடே. கிரிக்கெட்டில் ஒரு தனிநபர் நான்கு இலக்க ரன்களை எடுத்த சாதனையை நிகழ்த்திய பள்ளி மாணவன். மும்பை கிரிக்கெட் கிளப் நடத்திய மேட்ச்சில் 323 பந்துகளில் பிரணவ் எடுத்த 1009 ரன்களில் 129 பவுண்டரிகளும் 59 சிக்ஸர்களும் அடக்கம். ‘‘அவனோட 15 வருஷ உழைப்புக்குக் கிடைத்த பலன் இது. எங்க ஏரியாவில் பிரணவ் மாதிரி நிறைய பசங்க இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கறதில்லை’’ என வெகுளியாகச் சொல்லும் பிரணவின் அப்பா பிரசாந்த், ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர்.

* பத்ம விருது கேட்டு பலரும் தனக்கு அன்புத்தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக ஆதங்கப்பட்டிருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. சீனியர் நடிகை ஆஷா பரேக் ஏற்கனவே பத்ம விருது பெற்றவர். தனக்கு பத்மபூஷண் வேண்டுமென கேட்டிருக்கிறார். ‘‘மும்பையில் என் வீட்டில் லிஃப்ட் ரிப்பேர். படிகளில் 12 மாடி ஏறி வந்து அவர் தனக்கு விருது தர பரிந்துரை செய்யுமாறு கேட்டபோது தர்மசங்கடமாக இருந்தது’’ என கட்கரி போட்டு உடைத்தது, அவரை அணுகிய இன்னும் பலரை அச்சத்தில்
தள்ளியிருக்கிறது.

* நடிகை பார்வதி மேனன் (‘பூ’ பார்வதிதான்), தன் பெயரில் சாதிப் பெயரை பிற்சேர்க்கையாக இணைக்க வேண்டாம் என மீடியாவிடம் சொன்னது பெரும் பிரச்னையாகியிருக்கிறது. ‘‘அப்படியானால் தான் பிறந்த சாதியை பார்வதி அவமதிக்கிறாரா? சாதிப் பெயர் பயன்படுத்துகிறவர்களை தாக்குகிறாரா?’’ என்றெல்லாம் சர்ச்சைகள் சாட்டை சுழற்றின. ‘‘இது என் தனிப்பட்ட விருப்பம். என் பிறப்புச் சான்றிதழ் தவிர வேறு எந்த ஆவணத்திலும் என் சாதிப்பெயர் இல்லை. சாதி மூலம் நான் அடையாளம் காணப்பட விரும்பவில்லை’’ என துணிச்சலாக பதிலளித்திருக்கிறார்.

* ‘செக்ஸியான வெஜிடேரியன் யார்’ என ஒவ்வொரு ஆண்டும் பீட்டா அமைப்பு கருத்துக்கணிப்பு நடத்துகிறது. இந்த ஆண்டு இதில் முதலிடம் பிடித்திருப்பவர்கள் அமீர் கானும் அனுஷ்கா சர்மாவும்!

* ‘குடைக்குள் மழை’ மதுமிதாவை ஞாபகம் இருக்கிறதா? இப்போது, ‘புத்தன் இயேசு காந்தி’
படத்தில் கிஷோருடன் நடித்து வருகிறார். அதில் சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் ஆக்டிவிஸ்ட் என்பதால், அருந்ததி ராயை ரோல் மாடலாக நினைத்து, தன் கேரக்டருக்காக ஹோம் வொர்க் பண்ணியிருக்கிறார் மது.

* ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி இந்த ஆண்டில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அதற்காக மீசை, தாடி வளர்த்து வருகிறார். அனேகமாக படத்தை சுந்தர்.சி இயக்குவார்.

* சமந்தாவிற்கு 2016 ஹேப்பி ஆண்டு. இந்த ஆண்டின் முதல் பாதியில் அவரின் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவை விஜய், சூர்யா, மகேஷ்பாபு எனப் பெரிய ஹீரோக்களின் படங்கள் என்பதால் சமந்தா கண்களில் சந்தோஷ மின்னல்கள்.

* கங்கை நதியில் இனி யாராவது அசுத்தம் செய்தால், அவர்களை ராணுவம் வளைத்துப் பிடிக்கக்கூடும். யெஸ், ‘கங்கா டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ற பெயரில் ராணுவத்தின் பிரிவு ஒன்றை கங்கையைப் பாதுகாக்கும் பணிக்கு பயன்
படுத்தப் போகிறார்கள். கங்கையை மாசுபடுத்துபவர்களைப் பிடித்து, மரம் நடச் சொல்வது போன்ற தண்டனைகளை ராணுவம் வழங்குமாம்.

* சென்ற ஆண்டு மூன்று படங்கள் நடித்து முடித்தது போல, இந்த ஆண்டில் நான்கு படங்கள் செய்துவிடும் ஐடியாவில் இருக்கிறார் கமல். ‘அப்பா அம்மா விளையாட்டு’ லொகேஷன் வேலைகளுக்காக அமெரிக்கா, ஜார்ஜியா நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். இம்மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள்.

* ‘குக்கூ’ மாளவிகா நாயர், தெலுங்கில் ‘யவடு சுப்ரமணியம்’ ஹிட்டைத் தொடர்ந்து ‘கல்யாண வைபோகமே’ படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். சமீபத்தில் அதன் ஷூட்டிங்கில் பிறந்த நாள் கொண்டாடிய மாளவிகா, தமிழில் நல்ல ஆஃபருக்காகக் காத்திருக்கிறார்.

* தனுஷின் ‘கொடி’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். உடனே தனுஷ் - அனிருத் இடையே நட்புணர்வு இல்லை என்ற செய்தி பரவிவிட்டது. ஆனால், ‘‘இப்போது உடனே நான் பாட்டு கொடுக்கும் மனநிலையில் இல்லை. சந்தோஷ் நாராயணனைப் பயன்படுத்துங்கள்’’ எனச் சொன்னதே அனிருத்தான்.

* ‘‘பாலிவுட்டில் பிரபல நடிகர்களும் நடிகைகளும் என்னோடு சேர்ந்து ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்குக்கூட தயங்குகின்றனர்’’ என ஆதங்கப்பட்டிருந்தார் சன்னி லியோன். சமீபத்தில் ஒரு விழாவில் ப்ரியங்கா சோப்ராவோடு சன்னியை புகைப்படம் எடுத்தார்கள். இதை ப்ரியங்கா விரும்பவில்லை என கிசுகிசு பரவியது. ‘‘ஆமாம்! நான் சன்னியோடு போட்டோ எடுத்துக்கொள்ள தயங்கினேன். காரணம், என்னோடு ஒப்பிடும்போது அவர் மிக அழகாக இருந்தார்’’ என ப்ரியங்கா வெளிப்படையாகச் சொல்லி, சன்னியை நெகிழ வைத்துவிட்டார்.

* சென்னையில் விறுவிறுவென படபடக்கிறது ‘கபாலி’ ஷெட்யூல். தைவான் நடிகரான வின்ஸ்டன் சாவ், மலேஷிய நடிகர் ரோஸ்யம் நார் ஆகிய இருவரும் படத்தில் வில்லனாக நடிக்கிறார்கள். இதில் வின்ஸ்டன் சாவ், ஒரு படத்தில் ஜாக்கி சானுடன் இணைந்து நடித்தவர் என்பதால் ‘கபாலி’யின் சண்டைக் காட்சிகள் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.