முகங்களின் தேசம் : ஜெயமோகன்



அன்னமிட்ட கைநான் 2012ல் என் ஆறு நண்பர்களுடன் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டேன். ஈரோட்டின் அரச்சலூரில் இருந்து ஒரு காரில் கிளம்பி கர்நாடகத்தின் சாம்ராஜ்பேட் அருகே உள்ள கனககிரி வழியாக மகாராஷ்டிரம், குஜராத் என வடக்கு நோக்கிச் சென்று, ராஜஸ்தானிலுள்ள லொதுர்வா என்னும் சிற்றூரை அடைந்து மத்தியப்பிரதேசம் வழியாகத் திரும்பினோம். கிட்டத்தட்ட 12 ஆயிரம் கிலோ மீட்டர், நாற்பத்தைந்து நாட்கள். நோக்கம், இந்தியாவின் தொன்மையான சமண வணிகப்பாதை இன்றும் இருக்கிறதா என்று பார்ப்பது!

இந்தியாவில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில்தான் பிரபலமான வணிகப்பாதைகள் அமைந்தன. அமைத்தவர்கள் சமண வணிகர்கள். சமணம் அன்றும் இன்றும் வணிகர்களின் மதம். ஒரு மனிதன் ஒரு நாளில் நடந்து செல்லக்கூடிய தொலைவுக்கு ஒரு இடம் என அவர்கள் இந்தியா முழுக்க வணிகப்பாதைகளில் அறச்சாலைகளை அமைத்தனர். அங்கு உணவும் தங்குமிடமும் அனைவருக்கும் இலவசம்.

அந்த அறச்சாலைகள் இன்றும் இருக்கின்றனவா என்று பார்ப்பதே எங்கள் திட்டம். உண்மையில் இந்தியா முழுக்க அவை இன்றும் உயிர்ப்புடன் இருப்பதைக் கண்டுகொண்டோம். எங்கள் பயணம் முழுக்க அந்த அறச்சாலைகளில் இலவசமாகத் தங்கி உணவுண்டு சென்றோம். ஓரிரு நாட்கள் வெளியே தங்கினோம். டீ குடிக்க மட்டும் காசை வெளியே எடுத்தோம். நாற்பத்தைந்து நாட்களுக்கு கார் கட்டணம் தவிர தலைக்கு இரண்டாயிரம் ரூபாய்தான் செலவாகியது.

2500 வருடங்களாக பசிப்பிணி போக்கும் அமுதசுரபி இங்கே சோறு குறையாமல் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்று உணர்ந்த நாட்கள் அவை. அந்த அறம் வாழ்வது அமைப்புகளில் அல்ல; மதங்களில் அல்ல; எளிய மனிதர்களிடம் என ஒவ்வொரு நாளும் உணர்ந்தோம். அதை உணரச் செய்த முகங்களில் ஒன்று ஷிண்டேயுடையது.

தக்காணப் பீடபூமி வட இந்தியா நோக்கி சரிந்திறங்கும் செங்குத்தான மலை விளிம்பு பூனாவின் அருகே உள்ளது. அங்குள்ள நானேகட் என்னும் தொன்மையான சிறிய கணவாய், சமணர்களின் பழமையான வணிகவழி. அதைப் பார்ப்பதற்காகச் சென்றோம். காலை எட்டரை மணிக்கு லென்யாத்ரி என்னும் குடைவரை ஆலயத்தைப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். சென்று சேர மூன்று மணி நேரமாகியது. மிக மோசமான ஜல்லி பரவிய சாலை. வழி கேட்டபோது சாலையோரம் நின்றிருந்த ஒரு பெரியவர் வந்து, தன்னை ஏற்றிச் செல்லும்படி கோரினார். அந்தச் சாலையில் எந்த வண்டியை எதிர்பார்த்து அவர் நின்றிருந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. ஏற்றிக்கொண்டோம்.

மராட்டி பேசுபவர். காந்தி குல்லாய், பைஜாமா - ஜிப்பா அணிந்த மெல்லிய மனிதர். எங்களுக்கு இந்தியே நான்கைந்து சொற்களுக்கு மேல் தெரியாது. ஆனால் பேச ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் அன்றுவரை சந்தித்த அத்தனை மனிதர்களிடமும் நட்பார்ந்த மனநிலையை, உபசரிப்பை, எதிர்பார்ப்பில்லாத அன்பை மட்டுமே கண்டோம். முற்றிலும் அன்னியர்களைக் கண்டதும் இந்த மனிதர்களின் முகம் மலர்வது மனநிறை
வளிப்பது.

முற்றிலும் அன்னியர், மொழியே தெரியாதவர்கள் வந்து கேட்கும்போது எதை நம்பி வழி சொல்கிறார்கள்? எதை நம்பி காரில் ஏறி கூட்டிச்சென்று காட்டுகிறார்கள்? அந்த நம்பிக்கையே இந்த தேசம். கான்க்ரீட் அறைகளுக்குள் அமர்ந்திருக்கும் எளிய குமாஸ்தா மனங்களுக்கு இது புரியாது. வண்டியில் ஏறியவர் தன் மகள்களை, விவசாயத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பது தெரிந்தது. நாங்கள் கன்னியாகுமரியிலிருந்து வருகிறோம் என்றதும் பக்தியுடன் கைகூப்பினார்.

நானேகட் செல்லும் வழியில் இருந்த காட்கர் என்னும் கிராமத்தில் அவரை இறக்கிவிட்டு விட்டுச் சென்றோம். அதன்பின் மேலே செல்லத் தெரியாமல் திகைத்து நின்றோம். செம்மண் பொட்டலில் ஒரே ஒரு வீடுதான்  இருந்தது, உள்ளே யாருமே இல்லை; பூட்டப்படவும் இல்லை. நண்பர் வினோத் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தார்.  அதுதானா பாதை என்று தெரியவில்லை.  நண்பர் கிருஷ்ணன் ஒருவரை தூரத்தில் கண்டு சுட்டிக் காட்டினார்.  அருகே போய் விசாரித்தோம்.

அவர் மெலிந்த செம்மண் நிறமுள்ள மனிதர். பைஜாமாவும் நீளமான ஜிப்பா போன்ற உடையும் காந்தி குல்லாயும் அணிந்திருந்தார். எங்கள் வினாக்களை சைகைகளால் புரிந்துகொண்டு விரிவாக மராட்டியில் சொன்னார். எங்களில் கிருஷ்ணனும் முத்துக்கிருஷ்ணனும் ஓரளவு இந்தி பேசுவார்கள். அதுதான் சாலை என்பதை ஓரளவு உறுதி செய்துகொண்டோம்.  நானேகட் அருகேதான்.

அவர் பெயர் ஷிண்டே. அது அவரது குலப்பெயர். எங்களை உள்ளே வந்து சாய் சாப்பிட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு வீடே இல்லை. அவரே கட்டிய  மண்ணாலான தொழுவத்துக்குள் நான்கைந்து காளைகள், பசுக்கள், கன்றுக்குட்டிகள் நின்றன. அவர் தன் சிறிய வீட்டை இடித்துத் தானே செங்கல் அடுக்கி கொஞ்சம் பெரிதாகக் கட்டிக்கொண்டிருந்தார். அருகே சின்ன கூடாரம் ஒன்றை, கைக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு கட்டியிருந்தார். பிளாஸ்டிக் தாள்கள், சாக்குப்பைகள் எல்லாமே பயன்படுத்தப்பட்டிருந்தன. முக்காடு போட்ட அவரது மனைவி நாணத்துடன் எங்களைப் பார்த்துச் சிரித்து ‘‘சாய் குடியுங்கள்’’ என்றார்.

சாய் குடித்தோம். நானேகட் சற்று அப்பால்தான். ஆனால் அங்கே சென்று இறங்கி ஏற ஐந்து மணி நேரமாகும் என்றார். எங்கும் உணவகம் ஏதுமில்லை. ‘‘மலை ஏறிவிட்டு வருகிறோம், சாப்பாடு தயார் செய்து வைக்கமுடியுமா?’’ என்று ஷிண்டேயைக் கேட்டுக்கொண்டோம். அவர் கண்களைச் சுருக்கி எங்களை நோக்கிய பின் குழப்பமாகத் தலையசைத்தார். இருநூறு ரூபாய் பணம் கொடுத்தபோது தயங்கியபடி வாங்கிக்
கொண்டார்.

 நானேகட் எங்கிருக்கிறது என தெரியவில்லை.  அதன் அமைப்பு அப்படி. கொஞ்ச தூரம் சென்றபோது சாலை ஒரு மலையருகே முட்டி நின்றது. மலையின் நடுவே ஒரு சிறிய இடுக்கு தெரிந்தது.  அல்லது ஒரு வெடிப்பு! இறங்கிப் பார்த்தால் பெரும் வியப்பு. எட்டடி அகலமான ஒரு சிறிய சாலை மலையிடுக்கு வழியாக சுழன்று சுழன்று இறங்கி பல கிலோ மீட்டர் ஆழத்தில் விரிந்து கிடந்த பசுமையான சமவெளி நோக்கிச் சென்றது. அதுதான் நானேகட்!

அந்தப் பாதை பழங்காலத்தில் சரிவான கல் படிகளாக இருந்திருக்கலாம். அது பயன்பாட்டிலிருந்து அகன்று இரண்டாயிரம் வருடங்களாகின்றன. கற்கள் இளகிக் குவிந்து கிடந்தன. சுழன்று சுழன்று செல்லும் பதினாறு கிலோ மீட்டர் தொலைவு. அது உண்மையில் சஹ்யாத்ரி மலையின் வடக்கு வாசல்.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் எழுநூறாண்டு காலம் விந்தியமலைக்குக் கீழே உள்ள ஆந்திர- கர்நாடக நிலப்பகுதிகளை ஆண்டவர்கள் சாதவாகனர்கள். அவர்களின் காலகட்டத்தில் இந்தப் பாதை தக்காணத்தில் இருந்து கல்யாணுக்குச் செல்லும் முக்கிய பாதையாக இருந்தது எனக் கல்வெட்டுகள் சொல்கின்றன. நான் என்றால் நாணயம், கட் என்றால் வழி. நாணயத்தின் பாதை. அன்று இது ஒரு சுங்கமுனையாக இருந்திருக்கிறது. இங்குள்ள குகைகளில் கிடைக்கும் கல்வெட்டுகள் மௌரியர் காலத்திலேயே இந்தப் பாதை பயன்பாட்டில் இருந்ததாகச் சுட்டுகின்றன.

அக்காலகட்டத்தில் வட இந்தியாவில் இருந்து தென்னகத்துக்கு வரும் வழிகளில் இது முக்கியமானதாக இருந்திருக்கலாம். ஏனென்றால் இந்தப் பாதையைச் சூழ்ந்துள்ள பகுதிகள் எல்லாமே வளமானவை. நீர் வசதி கொண்டவை. அன்றெல்லாம் குறைந்தது பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உணவும் நீரும் இல்லையேல் பயணம் செய்ய முடியாது.

இன்று பிரபலமாக உள்ள  மத்தியப் பிரதேசம் வழியாகத் தக்காணத்துக்கு இறங்கும் பாதை அன்று வறண்ட ஆளற்ற நிலம். தண்டகாரண்யக் கொடுங்காடுகளும் அதற்குப்பின் பிரமாண்டமான அரைப்பாலைவெளியுமாக இருந்தது. அந்த வழியெங்கும் சத்திரங்களும் அருகே குளங்களும் அமைந்த பின்னர்தான் அதை வணிகர்கள் பயன்படுத்தினர். அதற்கு முன்பாக இந்தப்பாதையே வணிகர்களுக்குரியதாக இருந்தது. வழியெங்கும் வணிகர்களுக்கான கிராமங்களும் பண்டகசாலைகளும் இருந்திருக்கின்றன.

சாதவாகனர்களின் ஆற்றல்மிக்க பேரரசியான நாயனிகா இந்தப் பாதையை விரிவாக்கம் செய்திருக்கிறாள். இவள் கி.மு. 180 முதல் 170 வரை ஆண்ட சதகர்ணி என்ற மன்னரின் விதவை. சதகர்ணி என்றால் நூறு செவிகள் கொண்டவர் என்று பொருள். பின்னர் அது அவர்களின் வம்சப்பெயராக ஆகியது.

சதகர்ணிகளைப் பற்றி மிகக்குறைவாகவே செய்திகள் கிடைக்கின்றன. பேரரசர் சதகர்ணி, சுங்க வம்சத்தைச் சேர்ந்த மகத மன்னர் புஷ்யமித்ர சுங்கருக்கும் கலிங்கத்தை ஆண்ட காரவேலருக்கும் சமகாலத்தவர். மால்வா, அனுபா, நர்மதா சமவெளி மற்றும் விதர்ப்பத்தை சதகர்ணி வென்றார் என்றும் ஓர் அஸ்வமேத யாகத்தையும், ஓர் ராஜசூய யாகத்தையும் செய்தார் என்றும்  கல்வெட்டுக் குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

அஸ்வமேதம் செய்தமையால் தன்னை சாம்ராட் என்றும் தென்னகத்தை வென்றமையால் தன்னை தட்சிணபதி என்றும் அழைத்துக்கொண்டார். அவர் இறக்கையில் வேத என்ற இளவரசன் குழந்தையாக இருந்தான். ஆகவே அவரது மனைவி நாயனிகா இருபதாண்டுக்காலம் நாட்டை வெற்றிகரமாக ஆண்டார்.

நாயனிகா என்றும் அழைக்கப்பட்ட இந்த அரசி, மராத்தாவின் சிற்றரசர் ஒருவரின் மகள். இந்தியாவின் மையநிலத்தை வணிகம் மூலமும் வேளாண்மை மூலமும் நாகரிகத்துக்குக் கொண்டு வந்ததில் முக்கியமான பங்களிப்பாற்றியவள் இந்த அரசி. இந்தியாவின் பேரரசிகளில் இவளுக்கே முதலிடம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வதுண்டு. நாயனிகா இப்பகுதியெங்கும் வளர்ச்சிப்பணிகளுக்குப் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்தார்.   இங்குள்ள கல்வெட்டு நாயனிகாவின் முழுக் குடும்பத்தையும் குறிப்பிடுகிறது என்கிறார்கள்.

கீழே உள்ள சமவெளியில் மலையிலிருந்து சிற்றருவியாக இறங்கிச்செல்லும் குக்காடி ஆறு வெள்ளி ரேகையாக ஓடுகிறது. அங்கே இன்று அதிக மனிதவாசமில்லை. பெரும்பாலும் அடர்காடுகள்தான். வைஷாகெரே என்ற கிராமம் கொங்கணப் பக்கத்திலும் காட்கர் என்ற கிராமம் மகாராஷ்டிரப் பக்கத்திலும் இந்தக் கணவாய்க்கு இரு பக்கத்திலும் காணப்படுகின்றன.

நாங்கள் காட்கரில் இருந்து வந்து நானேகட் கணவாய் வழியாக இறங்க ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி உயரமான செங்குத்தான ஒற்றைக்கருங்கல் மலைகள் இரு பக்கமும் எழுந்து நின்றன. நடுவே அந்த சிறிய கணவாய்ப் பாதை பிரமாண்டமான மாடிப்படிக்கட்டு போல சுழன்று சுழன்று இறங்கியது. கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட அந்தக்கால அமைப்பு பல இடங்களில் இன்றும் அப்படியே உள்ளது.

அந்தப் படிகளில் வெயிலே பட்டிருக்காது.  ஏனென்றால், கிழக்கும் மேற்கும் இரு செங்குத்தான பாறைமலைகளும் வெயிலை மறைக்கின்றன. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி இறங்குகிறது இந்தப் பாதை. தென்னிந்தியாவின் தக்காணப் பீடபூமியின் விளிம்பிலிருந்து வட இந்தியப் பெருநிலம் நோக்கி 2500 அடி ஆழத்துக்கு செங்குத்தாக இறங்கிச் செல்வதென்பது மெய் சிலிர்க்கச் செய்யும் அனுபவம்.

மூச்சு நெஞ்சை அடைத்தது. காதுகள் குளிர்ந்து சிலிர்த்தன. கிட்டத்தட்ட எட்டு கி.மீ. அளவுக்கு இறங்கிச் சென்றோம். அதன்பின் கீழே விரிந்த நிலத்தைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். கடைசிவரை இறங்கினால் ஏறிவர மாலையாகி விடுமெனத் தோன்றியது. கையிருப்புக் குடிநீரும் குறைவு. ஆகவே மேலேற முடிவெடுத்தோம்.

அன்றையப் பகல்பொழுதை முழுக்க விழுங்கிய மலையேற்றம். மூச்சு வாங்க வியர்த்து களைத்து அமர்ந்து அமர்ந்து மேலேறி வந்தோம். மேலே வந்து அமர்ந்து, கீழே விரிந்து கிடந்த நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நூற்றாண்டுகள் தாண்டிப் பின்னால் சென்றது போல. சாதவாகனர் காலகட்டத்தில் அவ்வழியாகச் சென்ற வணிகர்களின் காலடி ஒலிகளைக் கேட்க முடியும் போல...

மேலே வந்து, எழுந்து உயர்ந்திருந்த மலை மேல் ஏறினோம். காய்ந்த புல்லால் ஆன மலைச்சரிவு பொன் வேய்ந்த கோபுரம் போலிருந்தது. மேலே மலையுச்சி வரை அங்கிருந்து காணும் காட்சியை ஊகிக்க முடிந்திருக்கவில்லை. அந்தக் கணவாய்க்கு இருபக்கமும் மலை மிகச்செங்குத்தாகக் கீழிறங்கிச் சென்றது. அமெரிக்காவின் கிராண்ட் கான்யன் மலைவிளிம்பில் நின்று கீழே பார்ப்பது போல் இருந்தது. இந்தியாவில் எங்கும் இப்படி ஒரு கால் நடுங்கச் செய்யும் செங்குத்தான சரிவை நான் கண்டதில்லை, இமயமலைகளில் கூட. 

நாங்கள் திரும்பி வந்தபோது ஷிண்டேயைக் காணவில்லை. அவரது மாடுகளும் இல்லை. குடில் மட்டும் கிடந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘‘ஏமாத்திட்டானா சார்?’’ என்று கிருஷ்ணன் கேட்டார். அது நமது நாகரிகம் நமக்குக் கற்பித்த ஐயம். தொலைவில் ஷிண்டேயின் மனைவி கைநீட்டி எங்களை அழைத்தார். நாங்கள் வசதியாகச் சாப்பிட அவர் அருகே ஒரு இடம் அமைத்திருந்தார். ஷிண்டே தயிர் வாங்குவதற்காக பத்து கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துச் சென்றிருந்தார். மூச்சிரைக்க வந்திறங்கி புன்னகையுடன் ‘‘வாருங்கள்’’ என்றார்.

 அந்தக் கூடாரத்துக்கு வெளியே வயலில் சாக்கையும் கம்பளியையும் விரித்து எங்களை அமரச் செய்து சூடான சப்பாத்தி, பருப்புக்குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் பரிமாறினார். உளுந்து சேர்த்து வடிக்கப்பட்ட சுவையான சோறு. தயிர்.  போதும் என மறுத்த ஓட்டுநரை ஷிண்டே ‘‘சாப்பிடு... சின்னப்பையன் நீ’’ என ஓர் அதட்டல் போட்டு சாப்பிடச் செய்தார். சட்டென்று ஓர் மன எழுச்சி என் கண்களைக் கசியச் செய்தது. அந்த வேளையில் கிடைத்ததைக் கொண்டு அவர் ஓர் எளிய உணவைச் சமைத்து பணத்தை மிச்சப்படுத்தியிருக்கலாம். ஆனால் அந்த உணவு நாங்கள் கொடுத்த தொகையைவிட அதிகம் செலவு கொண்டது.

  நான் ‘‘இந்தியா’’ என்று ஆரம்பித்துப் பேசும்போது என்னிடம் பேச வருபவர்கள் ஓர் அரசியல் கட்டமைப்பை, ஒரு வரைபடத்தை இந்தியா என எண்ணிப் பேச வருகிறார்கள். நான் இந்த தேசத்து நிலப்பரப்பில் அலைய ஆரம்பித்து முப்பதாண்டுகளாகின்றன. நான் இந்தியா என நினைப்பது எனக்கு அன்னமிட்ட ஆயிரக்கணக்கான கைகளை.

பல ஆண்டுகள் நாடோடியாக அலைந்த நான் மிக அபூர்வமாகவே பட்டினி கிடந்திருக்கிறேன். அனேகமாக எங்கும் இல்லறத்தாரால் கனிவுடன் உணவிடப்பட்டிருக்கிறேன். எனக்கு என் தேசம் மனித உள்ளங்களில் குடியிருக்கும் அன்னபூரணிதான்.

 இன்று இந்தத் தரிசனத்தைப் புரிந்து கொள்ளும் திராணியுள்ளவர்களே குறைந்துவிட்டார்கள். வெற்று லௌகீகமும் அதற்கான நியாயங்களும் மட்டும் இங்கே ஒவ்வொரு உள்ளத்திலும் நிறைந்துள்ளன. இங்குள்ள அரசியலும் வெறும் உலகியல் வெறியின் அரசியலே, எந்த லட்சியவாதத்தின் அரசியலும் அல்ல. இங்கே எல்லா விவாதங்களிலும் ஒலிப்பது அந்த ஆன்மா வறண்ட அரசியல் தர்க்கங்களே.

ஆனால் ஷிண்டேக்களை விளைய வைக்கும் வலிமை இந்த மண்ணுக்கு எப்போதும் இருக்கும் என்றே நினைக்கிறேன். அவரது மெலிந்த உறுதியான கரங்களைப் பற்றிக்கொண்டு என் நன்றியை, வணக்கத்தை, நெகிழ்ச்சியைச் சொன்னேன். ‘‘மன்னிக்க வேண்டும், நான் என் வறுமையால் பணம் பெறும்படி ஆகிவிட்டது’’ என்றார். அச்சொற்களைப் புரிந்துகொண்டபோது அவரை ஆரத் தழுவிக்கொண்டேன்.  ஷிண்டே என் தேசத்தின் முகம்.

தென்னிந்தியாவின் தக்காணப் பீடபூமியின் விளிம்பிலிருந்து வட இந்தியப்  பெருநிலம் நோக்கி 2500 அடி ஆழத்துக்கு செங்குத்தாக இறங்கிச் செல்வதென்பது  மெய்சிலிர்க்கச் செய்யும் அனுபவம்.

2500 வருடங்களாக பசிப்பிணி போக்கும் அமுதசுரபி இங்கே சோறு குறையாமல்  இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த அறம்  வாழ்வது அமைப்புகளில் அல்ல; மதங்களில் அல்ல; எளிய மனிதர்களிடம்!

(தரிசிக்கலாம்...)