ரிஷப லக்னத்துக்கு சுக்கிரனும் ராகுவும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் 20

ராகு நிழல் கிரகமாகும். தனக்கென்று எந்த வீடும் அதற்குச் சொந்தமில்லை. ஆனால், லக்னாதிபதி சுக்கிரனின் நட்பு அணியில் இடம் பிடித்துள்ள கிரகம்தான் ராகு. ஒரு சக்தியும் இல்லாத கிரகத்தை உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளப்படுத்துவதும் இந்த ராகுதான்.ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம்  என்று பல்வேறு விதத்திலும் அமைந்துள்ள கிரகங்களோடு சேர்ந்து ராகு ஆட்டம் போடும்.

எந்த கிரகத்தோடு சேர்கிறதோ, அதன் தன்மையை கிரகித்து பலன்களைக் கொடுக்கும். நட்பாக இருந்தால் நேர்மறைப் பலன்களையும், பகையாக இருந்தால் எதிர்மறைப் பலன்களையும் அளிக்கும். ராகுவும் சுக்கிரனும் கொஞ்சம் வித்தியாசமான பலன்களையே தரும் என்பதில் ஆச்சரியமில்லை.

மேலும், கலை கிரகமான சுக்கிரனோடு ராகு சேரும்போது சமூகத்தையே புரட்டிப் போடும் படைப்புகளை வெளிக்கொண்டு வரும். இப்போது ரிஷப லக்னத்திலிருந்து ஒவ்வொரு ராசியிலும் இவ்விரு கிரகங்களும் இடம் பெற்றால் என்னென்ன பலன்களைத் தரும் என்பதையும் பார்ப்போம்.

லக்னாதிபதியான சுக்கிரன், ரிஷபத்தில் - அதாவது லக்னத்திலேயே நிழல் கிரகமான ராகுவோடு அமர்ந்திருப்பது சிறப்பான விஷயமாகும். பச்சையும் கருமையும் சேர்ந்த ஒரு நிறத்தில் முதுகிலோ, வயிற்றிலோ ஒரு மச்சம் காணப்படும். ஏதேனும் ஒரு வடு முகத்தில் காணப்படும். அடிப்படையான வாழ்க்கை விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும். 

கணவனை இழந்த பெண்களால் யோகம் ஏற்படும். ‘மாமனார் இல்லை, மாமியார் மட்டும்தான் உண்டு’ என்று இருக்கக் கூடிய இடங்களில் இவர்களுக்கு வாழ்க்கைத்துணை அமையும். அதன் மூலம் சொத்து சேர்க்கை உண்டாகும். புறங்கூறும் பழக்கம் இருப்பின் அதை இவர்கள் விட்டுவிட வேண்டும். எப்போதும் எந்தச் செயலையும் தள்ளிப் போட்டு வேலை செய்யவே கூடாது. வித்தியாசமான சிந்தனையாளராக உருவெடுப்பார்கள். இவர்களின் மூக்கின் நுனி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். சிலருக்கு மெல்லியதாக நிறம் கூட மாறியிருக்கும்.

மிதுனத்தில் - அதாவது லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் ராகுவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதும் சிறப்பே ஆகும். உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை சுமாராகப் படித்து விட்டு பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். இந்த தன்னம்பிக்கையில் பன்னி
ரெண்டாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெறுவார்கள்.

ஏனெனில், மிதமிஞ்சிய தன்னம்பிக்கையாளராக இருப்பார்கள். அதனால், ‘போகட்டும்... பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற அலட்சிய சுபாவம் இருக்கும். திரைத்துறையில் கேமராமேன், ஆர்க்கிடெக்ட், இயக்கம் என்று நுழைந்து சாதிப்பார்கள். இவர்களை ‘இதுதான் படிக்கவேண்டும்’ என்று சொன்னால் படிக்க மாட்டார்கள். ஆனால், அவர்களாகப் படித்தால் மிக நன்றாகப் படிப்பார்கள்.

இவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்வார்கள். மொழிஅறிவு மிக நன்றாக இருக்கும். வழக்கறிஞராக நிறைய சாதிப்பார்கள். இவர்களை ‘ரெட்டை நாக்கு’ என்று சொல்வதுண்டு. காலையில் ஒன்று சொல்வதும் மாலையிலேயே அதை மறுத்துப் பேசுவதுமாக இருப்பார்கள். வலது கண்ணில் சிறிய பாதிப்பு இருந்தால் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடகத்தில் லக்னாதிபதியான சுக்கிரன், ராகுவோடு இணைகிறார். ஆடை, ஆபரணச் சேர்க்கை, பாரம்பரியமான பொருட்களை சேர்த்து வைத்துக்கொள்ளுதல் என்று ஆர்வத்தோடு செயல்படுவார்கள். பாரம்பரியத்தை கட்டிக் காப்பவர்களாகவும் அதன் பெருமையை பெருமிதத்தோடு பேசுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் உடன்பிறந்தவர்கள் பெண்ணாக இருப்பின் பிரச்னைகள் இல்லாமல் இருக்கும். ஆணாக இருந்தால் ஏதேனும் தொந்தரவுகள் வந்தபடி இருக்கும். இவர்கள் அம்பாள் உபாசகர், குறி சொல்பவர்களாகவும் இருப்பார்கள். வலிமையோடும் வளமையோடும் இருக்க வைக்கும் அமைப்பு இது.

சிம்ம ராசியில் சுக்கிரனும் ராகுவும் பூரம் நட்சத்திரத்தில் இருந்தால் மட்டுமே நல்ல பலன்கள் தடையில்லாமல் இருக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். வீடு, தோட்டம், வாகன வசதியோடு இருப்பார்கள். எங்கும் எப்போதும் சுத்தம் பார்த்தபடி இருப்பார்கள். காலில் அடிக்கடி அடிபடும். எனவே, கவனத்தோடு நடந்து கொள்வது நல்லது.

சிறு வயதில் தாயார் நோய்வாய்ப்படுதல் அல்லது தாயார் இழப்பு என நேரும். சிறிய வயதில் சூழ்ச்சிக்கார உறவினர்களால் பாதிக்கப்பட்டு மீள்வார்கள். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைவது போல, வேலையெல்லாம் தயாராக இருக்கும் நிலையில் கடைசி வருட அரியரால் வேலை கிடைக்காது போகும். எல்லாமே கைக்கு எட்டும் தூரத்தில் வந்து திடீர் தடையால் கிடைக்காது காலதாமதத்தால் கிடைக்கும்.

கன்னி ராசியில் சுக்கிரன் நீசமாகிறார். ஆனால், ராகு இங்கு யோக ராகுவாக அமர்கிறார். அதனால், ஒரு குடும்பத்தில் பத்து பேர் இருந்தால் அதில் இவர்கள் மட்டும் தனித்துத் தெரிவார்கள். தனக்கென்று புதிய பாதையை அமைத்துக் கொள்வார்கள். அவர்கள் குடும்பத்தில் யாருக்குமே சம்மந்தமில்லாத வேலையில் ஈடுபடுவார்கள். ஆறாம் அறிவைப் பயன்படுத்தி எல்லோரையும் திகைக்க வைப்பார்கள்.

தான் சார்ந்திருக்கக் கூடிய சம்பிரதாயங்களை ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பார்கள். இதனால், எல்லோரின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டி
யிருக்கும். ‘நான் பொல்லாதவன்தான்’ என்கிற மறைமுக அறிவிப்பு இவர்களிடம் இருக்கும். இவர்கள் பூர்வீகச் சொத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் கொண்டாட்டம்தான். ஆனால், ஆண் குழந்தையை சிரமப்பட்டு வளர்த்து ஒரு நிலைக்கு கொண்டு வருவார்கள். கனவு யோகம் உண்டு. அதாவது கனவு பலிதம் உள்ளவர்களாக இருப்பார்கள். அத்தை, மாமா என்று எந்த சொந்தமாக இருந்தாலும் யாரிடமும் சென்று உதவி கேட்க மாட்டார்கள்.

துலாம் ராசியில் ராகு மீண்டும் வலிமை பெறுகிறார். ஆறாம் வீட்டில் சென்று ராகு இங்கு மறைகிறார். எனவே, எதிரிகள் இருக்க மாட்டார்கள். வழக்கில் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் எதிரியே இவர்களை நன்கு வளர்ப்பார்கள். ரகசியங்களை வெளியிடுவதால் இவர்களுக்கு அதிக எதிரிகள் உருவாகக்கூடும். ஆகவே ரகசியத்தை அப்படியே மறைத்துக் கொள்வது நல்லது. பாலியல் நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பாலியல் விஷயங்களில் கவனமும் தேவை. வாழ்க்கைத் துணையோடு ஏதேனும் வாத விவாதங்கள் வந்தபடியே இருக்கும். வாழ்க்கைத்துணையைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

விருச்சிகத்தில் ராகுவும் சுக்கிரனும் அமர்ந்தால் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். வாழ்க்கைத்துணை வழியே நிறைய உதவிகள் கிடைக்கும். வாகனம், சொந்த வீடு என்று சிறு வயதிலேயே நல்ல வாழ்க்கை அமையும். இவர்கள் சொந்த ஊர், பூர்வீகம் என்று இருக்கக் கூடாது. வாழ்க்கைத்துணை வழியில் வந்த சொந்தங்கள் இவர்களால் பயனடைவார்கள். அதேபோல வேற்று மதத்தார் இவர்களோடு கூட்டு வியாபாரத்தில் ஈடுபட்டால் நன்றாகவே இருக்கும்.

தனுசு ராசியில் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்து அமரும்போது, லக்னாதிபதியான சுக்கிரன் எட்டில் மறைகிறார். கூடவே ராகுவும் போய் இணைகிறார். இவர்கள் பிறக்கும்போது ஆறு விரலோடு இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்கள் வாகனத்தில் செல்லும்போது தேவையற்று விளையாட்டுக்காகவும் பெருமைக்காகவும் வேகமாகச் செல்லக் கூடாது.

எவ்வளவு சம்பாதித்தாலும் காசு கையில் தங்காது. பூர்வீகத்தில் தாங்கள் வசித்த இடத்திற்கு மீண்டும் சென்று குடியேறக் கூடாது. பிறந்த ஊரிலிருந்து தென்மேற்குப் பக்கமாகப் பார்த்துக் குடியேற வேண்டும். பெண்கள் விஷயத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பது நல்லதாகும். யாராவது ஏதாவது சொன்னால் அதை அப்படியே நம்புவார்கள். ‘‘ஒரேயொரு முறை மட்டும் ஒரு லட்சம் செலுத்தினால் போதும். ஆறாயிரம் ரூபாய் மாதாமாதம் வரும்’’ என்றால் இவர்கள் கொண்டு போய் பணத்தைக் கட்டிவிட்டு வருவார்கள்.

மகரத்தில் இந்த அமைப்பு இருந்தால் இவர்களின் தந்தையார் மிகத் திறமையானவர்களாக இருப்பார்கள். சம்பளத்தோடு கூடிய நிறைய வருமானம் சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். மகரம் ராகுவிற்கு யோக வீடாக இருப்பதால் புராதனச் சொத்து, பாட்டன் சொத்தையெல்லாம் காப்பாற்றி வைத்துக் கொள்வார்கள். ஏதேனும், பெரிய பதவியில் இருந்து கொண்டே இருப்பார்கள். அமைச்சராக சிறிது காலம் இருந்துவிட்டு நற்பெயர் எடுப்பார்கள். சமுதாயத்தில் மதிக்கத் தகுந்த இடத்தில் அமர்வார்கள். தர்ம ஸ்தாபனங்களைத் தொடங்கி அதன் மூலம் நிறைய சமுதாயப் பணிகளைச் செய்வார்கள்.

கும்பத்தில் சுக்கிரனும் ராகுவும் அமைந்திருந்தால் சொந்தத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். கண்ணாடி, பீங்கான், எவர்சில்வர், ஐஸ்க்ரீம் என்று தொழில் தொடங்கி சாதிப்பார்கள். ஒரு சிலருக்கு நாடாளும் யோகமும் உண்டாகும். கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்து வியாபாரத்தை நன்கு விரிவாக்கம் செய்வார்கள். இவர்களில் சிலருக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் யோகமும் உண்டு. சட்டத்திற்குப் புறம்பான எந்த வியாபாரத்தையும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் பரமபத கட்டம் போல ஏற்ற இறக்கமாக இருக்கும்.

மீனத்தில் சுக்கிரனும் ராகுவும் அமர்வது என்பது மாபெரும் யோகமாகும். சுக்கிரன் உச்சமாக இருப்பார். கூடவே ராகுவும் யோகப் பலன்களை அருளுவார். எல்லா விஷயங்களைக் குறித்தும் பேசுவார்கள். எதையுமே வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பார்கள். மிக எளிதாக எல்லாமும் கிடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

மேஷமான பன்னிரெண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்திருந்தால் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். ஆனால், சம்பாதிக்கத் தெரியாது. எல்லாமும் அறிந்தவர் போலப் பேசுவார்கள். ஆனால், வேலையை மாற்றிக் கொண்டும் வேலைக்கே போகாமலும் பொறுப்பற்று இருப்பார்கள். ‘‘என் தகுதிக்கு யாரால் வேலை கொடுக்க முடியும்’’ என்ற அளவிற்கு பேசுவார்கள். 

ராகு - சுக்கிரன் சேர்ந்த இந்த அமைப்பானது நன்மையையே தரும் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில், ராகு என்ன இருந்தாலும் நாகம்தான். எனவே, கொடுத்தும் கெடுப்பார் ராகு. என்ன இருக்கிறதோ அதிலிருந்து மேலேறி மேலேறி சென்று கொண்டேயிருக்க வேண்டும். அதேசமயம் ராகுவானவர் சட்டென்று தூக்கிவிட்டு அப்படியே அதல பாதாளத்தில் தள்ளி விடவும் செய்வார். சுக்கிரன் கூடவே இருப்பதால் தவறான பாதையை சரியானது என்பது போல நம்ப வைப்பார்.

எனவே, தீர்மானமான ஒரு வாழ்க்கையை இந்த அமைப்புள்ளவர்கள் வாழ்வதற்கும், நெஞ்சில் உறுதியோடு இருப்பதற்கும் நிச்சயம் உக்கிரமான அம்மனை தரிசிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அம்மனே திருச்சிக்கு அருகேயுள்ள உறையூர் வெக்காளி அம்மன் கோயிலாகும். வெக்காளி அம்மனை தரிசிக்கும்போது நிச்சயம் மாற்றுப் பாதையில் பயணிக்காது சரியான வழியில் தெளிவாகவும் திடமாகவும் செல்வது சாத்தியமாகும்.

 ராகு சூட்சும ராகுவாக இருந்து உதவவும் சுக்கிரன் அதிநுட்பமான கலைத் தன்மையை அளிக்கவும் இந்த வழிபாடு உதவும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. திருச்சிக்கு அருகேயுள்ள உறையூரில் நகரத்தின் மையத்திலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

 (கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா
கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்