ட்வின்ஸ்



டெலிவரி ஆகிவிட்டது! சுகமான சுமைகளை இறக்கி வைத்தாகிவிட்டது! ஊரார் கண்கள் மொத்தமும் உங்கள் மேல்தான் இருக்கும். தினம் தினம் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் திருஷ்டி சுற்றிப் போடப்படும். குழந்தைகளைப் பார்க்க வருகிறவர்களின் கூட்டத்தால் வீடே திருவிழாக் கோலம் கொள்ளும். இந்த அத்தனை கொண்டாட்டங்களும் அடுத்தவர்களுக்குத்தான். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்க்கு இனிமேல்தான் ஆரம்பம் அத்தனை சவால்களும்! அத்தனை நாட்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு வயிற்றுக்குள் சமர்த்தாக உருண்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், இனிமேல் அப்படி இருக்க மாட்டார்கள். பசியா, தூக்கமா, வலியா, வேறு எதுவா... எல்லாவற்றுக்கும் அழுகையே அவர்களது மொழி!

குழந்தை கொஞ்சம் சிணுங்கினால் போதும்... பசியா இருக்கும்... தூக்கி வச்சு பால் கொடு’ என்கிற அட்வைஸ் அனைத்து நபர்களிடமிருந்தும் வரும். பசித்த குழந்தைக்குப் பாலூட்ட எந்தத் தாயும் சுணங்க மாட்டாள். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்க்கோ, அது மிகப்பெரிய சவால். இருவருக்கும் ஒரே நேரத்தில் பசி எடுத்து அழும்போது, யாரைத் தூக்குவது, யாருக்கு முதலில் பாலூட்டுவது என்கிற அவளது தவிப்பு, வார்த்தைகளில் அடங்காதது. ஒரு குழந்தைக்கு பாலூட்டி முடித்து, சற்றே இளைப்பாற நினைக்கையில் இன்னொன்று வீறிட்டு அலறும். பிரசவித்த முதல் சில மாதங்கள் அவளுக்கு இரவு, பகல் புரியாது. கடிகாரமும் காலண்டரும் அந்நியமாகப் போகும். பாலூட்டியே களைத்துப் போவாள் பச்சை உடம்புக்காரி. 

வருடங்கள் கடந்த பிறகும் மறக்க முடியாத அந்த அனுபவம் எனக்கும் உண்டு. மறக்க நினைத்தாலும் மாறாத நினைவு அது. வலியையும் வேதனையையும் சகித்துக் கொண்டு அந்த அனுபவத்தைக் கடந்து விட்டால், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்துவிட்ட திருப்தி நிச்சயம் இருக்கும்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மற்ற பிரசவங்களுக்கு சொல்ற அதே விதிதான் இவங்களுக்கும். சுகப்பிரசவமோ, சிசேரியனோ, குழந்தைங்க பிறந்த உடனேயே மயக்கம் தெளிஞ்சதும் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கணும். இரண்டு குழந்தைங்களைச் சுமந்திருந்ததால அவங்களோட கர்ப்பப்பை ரொம்ப அதிகமா விரிஞ்சிருந்திருக்கும். தாய்ப்பால் கொடுக்கிறது மூலமா கர்ப்பப்பை சுருங்கும்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பெண்களுக்கு வழக்கத்தைவிட ரத்தப்போக்கு அதிகமா இருக்கலாம். அதனால தாய்ப்பால் சுரக்கிறதுல கொஞ்சம் தாமதமாகலாம். அரிதா சில பெண்களுக்கு லேக்டேஷன் ஃபெயிலியர்’ பிரச்னையும் வரலாம். அதாவது, சுத்தமா தாய்ப்பாலே சுரக்காத நிலை இது. `போஸ்ட் பார்ட்டம் பிட்யூட்டரி நெக்ரோசிஸ்’ (Postpartum pituitary necrosis)னும் சொல்றதுண்டு. இவங்களுக்கு தாய்ப்பால் சுரப்பு இல்லாததோட, மாதவிலக்கும் நின்னுடும். தாய்ப்பாலே இல்லாத நிலையையும், தாய்ப்பால் கம்மியா சுரக்கிற நிலையையும் குழப்பிக்க வேண்டாம். கம்மியா சுரக்கிறவங்களுக்கு மருத்துவர்ஆலோசனையும், பூண்டு, கீரை மாதிரியான சில உணவுகளும் உதவும்.

ரெண்டு குழந்தைங்களுக்கும் போதுமான அளவு பால் சுரக்குமா டாக்டர்?’ - ட்வின்ஸை பெற்றெடுக்கிற எல்லா அம்மாக்களுக்கும் இந்த சந்தேகம் உண்டு. கவலையே வேண்டாம். ரெண்டு குழந்தைங்களுக்கும் போதுமான அளவு பால் சுரக்கும். குழந்தைக்கு பால் கொடுக்கக் கொடுக்க அது தானா சுரந்துக்கிட்டே இருக்கும்.

சில நேரம் பாலே பத்த மாட்டேங்குது... செயற்கை பால் கொடுக்கலாமா’னு கேட்கறவங்களும் உண்டு. டாக்டரோட அட்வைஸை கேட்டுட்டுக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கிறபோது, பாட்டில்ல கொடுத்துப் பழக்கறதைவிட, ஸ்பூன்லயோ, சங்குலயோ கொடுக்கறது நல்லது. இரட்டைக் குழந்தைகள் விஷயத்துல யாருக்கு பால் கொடுத்தோம், யாருக்கு கொடுக்கலைங்கிற குழப்பம் வர்றது சகஜம். எனவே ஃபீடிங் சார்ட் போட்டு வச்சுக்கிட்டு, எந்தக் குழந்தைக்கு எத்தனை மணிக்குக் கொடுத்தோம்னு குறிச்சு வச்சுக்கணும். குழந்தையோட எடை ஒரு நாளைக்கு 25 கிராம் கூடணும். அப்படி எடையில மாற்றம் இல்லாட்டா, அந்தக் குழந்தை சரியா பால் குடிக்குதாங்கிறதை கண்காணிக்கணும்.

 ரெண்டு குழந்தைங்களுக்கும் மாறி மாறி பால் கொடுக்கிறதால தாயோட மார்பகக் காம்புகள் வறண்டு, வெடிச்சு, புண்ணாகலாம். அதைத் தவிர்க்க டாக்டரோட ஆலோசனையின் பேர்ல மாயிச்சரைசர் அல்லது க்ரீம் உபயோகிக்கலாம். பால் கொடுக்கிறதுக்கு முன்னாடி, அதை சுத்தமான பஞ்சால துடைச்சு எடுத்துடணும். அந்த வறட்சியையும் வெடிப்பையும் கவனிக்காம அலட்சியப்படுத்தினா, குழந்தை பால் குடிக்கிற போது, அதோட வாய்லேருந்து பாக்டீரியா பரவி, மார்பகங்கள்ல Mastitis  என்ற இன்ஃபெக்‌ஷன் வரலாம். அது மார்பகங்கள்ல சீழ் பிடிக்கிற அளவுக்குக் கொண்டு போகும். அது சரியாகிற வரைக்கும் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாது.

வேலைக்குப் போகிற அம்மாக்களா இருந்தா, தாய்ப்பாலை பிரெஸ்ட் பம்ப் மூலமா எடுத்து ஸ்டெரிலைஸ் செய்த கன்டெயினர்ல எடுத்து வச்சு 6 மணி நேரத்துக்குள்ள குழந்தைக்குக் கொடுக்கலாம்.’’

குட்டி சுட்டீஸ்!

ஒன்றுக்கு ஆசைப்பட்டு 2 குழந்தைகள் கிடைத்தால் இரட்டைக் கொண்டாட்டம். ஒன்றோடு போதும் என இரண்டாவது கர்ப்பத்தைக் கலைக்க நினைத்தவருக்கு இன்னும் 2 குழந்தைகள் கிடைத்தால்? அப்படியொரு தர்மசங்கடத்தை எதிர்கொண்டவர்தான் கரூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி. சஞ்ஜீவனி, சதா சங்கவி என இரட்டை இளவரசிகளைப் பெற்றெடுத்த இவரது கதை, பல பெண்களுக்கும் பாடமும் கூட.

எனக்கு முதல்ல ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு இப்ப 11 வயசாகுது. அவன் ஒருத்தன் போதும்ங்கிற மனநிலையிலதான் நானும் என் வீட்டுக்காரரும் இருந்தோம். ஆனா, எதிர்பாராத நேரத்துல இன்னொரு கர்ப்பம் தங்கிடுச்சு. பீரியட்ஸ் வரலைனு டாக்டரை கேட்டு மாத்திரை எடுத்துக்கிட்டேன். ஊசி போட்டுக்கிட்டேன். ஆனாலும், பீரியட்ஸ் வரலைனு டாக்டர்கிட்ட போனேன். யூரின் டெஸ்ட் பண்ணிட்டு, கர்ப்பமா இருக்கிறதை உறுதி பண்ணிட்டாங்க. எனக்கு அந்தக் கர்ப்பத்தைத் தொடர விருப்பமில்லை. பீரியட்ஸ் வரணும்னு மருந்து, மாத்திரையெல்லாம் எடுத்துட்டோமே... அதனால குழந்தை ஊனமா பிறந்துட்டா என்ன செய்யறதுனு பயந்து, கர்ப்பத்தைக் கலைக்கிறதுனு முடிவு பண்ணினேன். 

45வது நாள் அபார்ஷன் பண்ணலாம்னு ஆஸ்பத்திரிக்கு போனபோது ஸ்கேன் பண்ணின டாக்டர், உனக்கு ரெண்டு கரு இருக்கும்மா... ட்வின்ஸ்’னு சொன்னாங்க. என்னோட பயமும் பரிதவிப்பும் இன்னும் அதிகமாயிடுச்சு. நான் பீரியட்ஸ் வரலைனு மாத்திரை எடுத்துக்கிட்டதையும், கருவைக் கலைக்க முடிவு பண்ணினதையும் டாக்டர்கிட்ட சொன்னேன். `நீங்க ரொம்ப ஒல்லியா, பலவீனமா இருக்கீங்க... டி அண்ட் சி பண்ணினா, உங்க கர்ப்பப் பை பலவீனமாயிடும்... குழந்தைங்க குறையோட பிறந்துட்டா என்ன செய்யறதுங்கிற உங்க கவலை நியாயமானதுதான்.

3 மாசம் வெயிட் பண்ணிப் பார்ப்போம். குழந்தைங்க நல்லபடியா இருந்தா கர்ப்பத்தை கன்டின்யூ பண்ணலாம். இல்லைனா அப்போ யோசிக்கலாம்’னு சொல்லி அனுப்பி வச்சாங்க. மனசு நிறைய திகிலோடவே 3 மாசத்தைக் கடத்தினேன். 4வது மாசத் தொடக்கத்துல மறுபடி ஸ்கேன் பண்ணின டாக்டர், `குழந்தைங்க ரெண்டு பேரும் ஆரோக்கியமா இருக்காங்கம்மா.. கவலைப்படாம இருங்க’னு சொன்னாங்க. ஆனாலும், எனக்கு நிம்மதியே இல்லை. கர்ப்ப காலம் முழுக்க இப்படியேதான் கடந்தது. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி... மூச்சு விட முடியாதபடி பாரம்... எலும்புகள்ல வலினு பிரசவ தேதியை நெருங்க நெருங்க என்னோட கஷ்டங்களும் அதிகமாயிட்டே போச்சு. கொடுத்த தேதிக்கு ஒரு வாரம் முன்னாடியே சிசேரியன் பண்ணி, குழந்தைங்களை வெளியில எடுத்துட்டாங்க. மயக்கம் தெளிஞ்சு கண்ணைத் திறந்ததும், முதல்ல என் குழந்தைங்களைக் காட்டச் சொன்னேன்.

ரெண்டு பேரும் எந்தக் குறையும் இல்லாமப் பிறந்திருக்காங்கனு பார்த்த பிறகுதான் எனக்கு உயிரே வந்தது. முதல்ல பையன்கிறதால, அடுத்த குழந்தை எப்படி இருந்தாலும் சம்மதம்னுதான் இருந்தேன். ரெண்டும் பெண் குழந்தைங்கனு தெரிஞ்சதும் என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவங்க ரெண்டு பேரையும் கையில வாங்கின அந்த நிமிஷத்துலேருந்து என் கவலை, சோகம், பயம் எல்லாம் மாயமாயிடுச்சு. என்னோட உலகமே அவங்கதான்னு ஆயிடுச்சு. அவங்களைத் தூக்கி வச்சுக்கிறது, குளிப்பாட்டறது, சாப்பாடு கொடுத்துத் தூங்க வைக்கிறதுனு 24 மணி நேரமும் அவங்ககூடவே இருந்தேன். என் அம்மாச்சியும் கணவரும் ரொம்ப உதவியா இருந்தாங்க.

குழந்தைங்களை வயித்துல சுமந்தப்ப பயம் காரணமா என்னால நார்மலா இருக்க முடியலை. அந்தக் குறை போக, அவங்க பிறந்ததும் அவங்கக்கூட பேசிக்கிட்டே இருந்தேன். ஆறே மாசத்துல ரெண்டு பேரும் கலகலனு சிரிச்சாங்க. ஒரு வயசுலயே பேச ஆரம்பிச்சிட்டாங்க. இப்பவும் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமான குழந்தைங்களா இருக்காங்க. அவங்க பிறந்த பிறகுதான் எனக்கு அங்கன்வாடியில வேலை கிடைச்சது. சொந்தமா வீடு கட்டினோம். வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. எல்லாமே நல்லதா நடக்குது.

கர்ப்பத்தைக் கலைக்கிறதுனு முடிவு பண்ணி ஆஸ்பத்திரிக்கு போனப்ப, என் கணவர் உள்ளேயே வரலை. அவருக்கு அதுல சம்மதமில்லாம வெளியிலயே நின்னுட்டார். அதுக்கேத்தபடி டாக்டரும் எனக்கு சரியான நேரத்துல சரியான அட்வைஸ் சொல்லி அபார்ஷன் பண்ணாம அனுப்பி வச்சாங்க. இது எல்லாமே சாமி செயல்னு நினைக்கிறேன். அவசரப்பட்டு அன்னிக்கு அபார்ஷன் பண்ணியிருந்தா, இன்னிக்கு என் வாழ்க்கை இவ்ளோ சந்தோஷமா இருந்திருக்குமா? ஒருத்தி டாக்டருக்கு படிக்கப் போறாளாம். இன்னொருத்தி டீச்சராக போறேங்கிறா. இப்பவே படிப்புல ரெண்டும் படுசுட்டி. அவங்க ஆசைப்படியே எதிர்காலம் அமையறதைப் பார்க்க இப்பலேருந்தே கனவுகளோட காத்திட்டிருக்கேன்...’’ என்கிறார் கண்கள் விரிய.

தமிழ்ச் செல்வியின் டிப்ஸ்

கர்ப்பம் உறுதி யானதும் உங்க கவனமெல்லாம் குழந்தைங்களைப் பத்தினதா மட்டும்தான் இருக்கணும். அவங்களை ஆரோக்கியமா பெத்தெடுக்கணும்னா அதுக்கு நீங்க ஆரோக்கியமா இருக்கணும். மனசை சந்தோஷமா வச்சுக்கணும். நடக்காத விஷயத்தை நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டு, படுக்கையிலயே விழுந்துகிடக்கிறதைத் தவிர்க்கணும். நல்ல சாப்பாடு, நிறைய சந்தோஷம்... இந்த ரெண்டும்தான் உங்கக் குழந்தைங்களுக்கு நீங்க கொடுக்கிற ஆரோக்கியமான அஸ்திவாரம்...’’

இரண்டு குழந்தைங்களைச் சுமந்திருந்ததால அவங்களோட கர்ப்பப்பை ரொம்ப அதிகமா விரிஞ்சிருந்திருக்கும். தாய்ப்பால் கொடுக்கிறது மூலமா கர்ப்பப்பை சுருங்கும்.

(காத்திருங்கள்!)

படங்கள்: அஜீத்