ஹார்ட்டிகல்ச்சர்



பூந்தோட்டம்

மலர்கள் என்றாலே நம் மனத்தில் ஒரு சந்தோஷம் பூக்கிறது. பூக்களைப் பார்க்கும்போதே நம்மையும் அறியாமல் நம் மனது உற்சாகம் பெறுகிறது. காரணம், அவற்றின் நிறமும் மணமும். ஒவ்வொரு பூவுக்கும் ஒரு நிறமும் ஒரு வாசமும் உண்டு. நிறத்துக்கும் மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம்?

‘பிரைமரி கலர்ஸ்’ எனப்படுகிற முதன்மையான வண்ணங்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய மூன்றும்.இரண்டாம்நிலை வண்ணங்கள் என்றால் பச்சை, ஆரஞ்சு மற்றும் வாடாமல்லி நிறங்கள். இந்த இரண்டு, தவிர வெள்ளை என எல்லாம் கலந்துதான் மற்ற நிறங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றையுமே வீட்டுத் தோட்டத்தில் கொண்டு வர நம்மால் முடியும்.

‘வார்ம் கலர்ஸ்’ மற்றும் ‘கூல் கலர்ஸ்’ என 2 வகைகள் உள்ளன. வார்ம் என்றால் பிரகாசமாக இருக்கக்கூடியவை. சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஆகியவை இந்த ரகம். கூல் கலர்ஸ் கொஞ்சம் டல்லாக இருந்தாலும் மனதுக்கு உற்சாகம் தரக்கூடியவை. நீலம், பிங்க், வாடாமல்லி நிறங்கள் இந்த ரகம். பச்சை நிறம் என்பது நியூட்ரல் கலர், அதாவது, நடுநிலையானது. வானவில் கலர்களான (Vibgyor) விப்ஜியார் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். வயலெட், இண்டிகோ, ப்ளூ, கிரீன், எல்லோ, ஆரஞ்சு மற்றும் ரெட். அதிலும் பச்சை நிறமானது நடுநிலையாகவே இருப்பதைப் பார்க்கலாம். பச்சையை ஏன் நடுநிலையான நிறம் என்கிறோம் தெரியுமா? அது எல்லா வயதினரையும், எப்படிப்பட்ட மனநிலை கொண்டவரையும் அமைதிப்படுத்தக்கூடிய குணம் கொண்டது.

சிவப்பு, மஞ்சள் மற்றும் நீல நிறங்கள் யாருக்குப் பிடிக்கும்? எப்போதும் துறுதுறுவென ஓடிக் கொண்டே இருப்பவர்களுக்குப் பிடிக்கும். சிலர் அமைதியாக யாருடனும் அதிகம் பேசிப் பழகாமல் தனிமைப்படுத்திக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஆரஞ்சு, பர்ப்பிள் பிடிக்கும். அதனால், குழந்தைகளுக்கு முதலில் குறிப்பிட்ட பிரைட் கலர்ஸ் மிகவும் பிடிக்கும்.
ஒரு வீட்டில் பல மனநிலையில் உள்ள நபர்கள் இருப்பார்கள். எனவே நம்முடைய பூந்தோட்டத்தில் இத்தனை வண்ணங்களின் கலவையும் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவரின் மனநிலைக்கும் ஏற்ப அந்தத் தோட்டம் அமையும்.

நம் சீதோஷ்ண நிலைக்கு வளரக்கூடிய மலர்கள் எவை... செடிகளில் வளரக்கூடியவை எவை... கொடிகளில் மலரக்கூடியவை எவை எனப் பார்க்க வேண்டும். சிலது முட்களுடன் இருக்கும். எந்தச் செடியை எங்கே வைக்கலாம்? உதாரணத்துக்கு குழந்தைகள் இருக்கும் இடத்தில் முட்கள் உள்ள செடிகளை வைக்க முடியாது. கொடியாக ஓடக் கூடியவற்றை வீட்டின் பக்கமாக வைக்க முடியாது. காம்பவுண்ட் சுவர் பக்கம்தான் வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலையை எடுத்துக் கொண்டால் செம்பருத்தி வைக்கலாம். அது பல வண்ணங்கள் கொடுக்கும். பொகேன்வில்லா... ‘தாள் பூ’ என்று சொல்வதுண்டு. அதற்கு தண்ணீர் குறைவாகவே தேவை. இதைத் தொட்டிகளிலும் வளர்க்கலாம். வேலி ஓரங்களில் கொடி மாதிரியும் வளர்த்து விடலாம். செடியாகவும் கொடியாகவும் இருமாதிரியும் வளரக்கூடியது.பராமரிக்கத் தயார் என்பவர்கள் ரோஜா வளர்க்கலாம். பெங்களூரு, ஓசூர் பக்கங்களில் இருந்து வாங்கி வரும் ரோஜாக்கள் நம்மூரில் சரியாக வளராது. ஆந்திரா ரெட், எட்வர்ட், கொடி ரோஸ் மாதிரியானவை நம் சீதோஷ்ண நிலைக்கு நல்லபடியாக வளரும்.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்களுக்கென ஒரு சின்னத் தோட்டம் அமைத்து ஸினியா, போர்டுலோகா எனப் படுகிற பருப்புக்கீரை, அமரான்தஸ் எனப்படுகிற கோழிக்கொண்டைப் பூ, சாமந்தி, செவ்வந்தி எல்லாம் விதைத்துக் கொடுக்கலாம். இதெல்லாம் ஒரு சீசனுக்கு விதைத்து பூத்ததும் எடுத்துவிட்டு, மறுபடி அடுத்த சீசனுக்கு விதைக்க வேண்டும். குழந்தைகளுக்கு எந்தெந்த சீசனில் எந்தெந்தப் பூக்கள் பூக்கும் எனச் சொல்லிக் கொடுத்து, ஒவ்வொரு சீசனுக்கு ஒரு பூவாக விதைக்கச் சொல்லி, அது பூத்து முடித்ததும் இன்னொன்றை விதைக்கக் கற்றுத் தரலாம். இப்படி வருடம் ஒரு முறை மலரக்கூடிய பூச்செடிகள்தான், தோட்டத்துக்கு ஓர் இடைவெளி கொடுக்கும். ஆங்கிலத்தில் அதை ‘மொனாட்டனி பிரேக்’ என்கிறோம். இது தோட்ட அமைப்பில் ஒரு  மாறுதலைக் கொடுக்கும்.

இட வசதி உள்ளவர்கள் மலர் படுக்கையாகவும் இல்லாதவர்கள் சின்னச் சின்ன தொட்டிகளிலும் போடலாம்.சுள்ளென வெயில் அடிக்கிற இடத்தில் வளரக்கூடிய பூக்கள் என சிலது உண்டு. பொகேன்வில்லா மற்றும் ரங்கூன் க்ரீப்பர் என்று சொல்லக் கூடிய கொடி வகையும் இந்த ரகம்.நிழல் பாங்கான இடத்தில் வளர பெட்ரியா என்கிற ஒரு செடி ஏற்றது. குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய கொடி வகைகளில் சங்கு புஷ்பம் முக்கியமானது. இதில் வெள்ளை மற்றும் நீலம் என இரண்டு நிறங்கள் கிடைக்கும்.

அடுத்து மூன்லைட் ஃபிளவர்ஸ். வெள்ளை பூக்களான இவை ரொமான்டிக் மூடை ஏற்படுத்தக்கூடியவை. இரவு நேர பார்ட்டிகளுக்கு உகந்தவை. இந்த வகைக்கு மிகச் சிறந்த உதாரணம் நந்தியாவட்டை. ஓரிதழ் நந்தியாவட்டையை விட அடுக்கு நந்தியாவட்டை இன்னும் அழகு.அடுத்து மல்லிகை. இதை வளர்க்கப் பராமரிப்பு மிக அதிகம். ‘ராத் கி ராணி’ என ஒரு செடி இருக்கிறது. ‘நைட் குயின்’ என ஆங்கிலத்தில் சொல்கிறோம். இரவில் பூக்கிற இது, அந்த நேரத்தில் அருமையான ஒரு வாசனையைப் பரப்பும்.

செம்பருத்தி, இட்லிப்பூ, மல்லிகை, முல்லை, அரளி போன்றவற்றை கடவுளுக்குப் படைப்பதற்காக வளர்க்கலாம். இங்கே நாம் பார்த்த எல்லா மலர்களுமே சென்னை சீதோஷ்ண நிலைக்கு வளரக்கூடியவை. மல்லிகை மற்றும் ரோஜாவுக்கு மட்டும் அதிகபட்ச பராமரிப்பு தேவைப்படும். மற்றதெல்லாம் குறைந்த பராமரிப்பிலேயே பூத்துக் குலுங்கக் கூடியவை.
செம்பருத்தி வைத்தால் அதில் மாவுப்பூச்சி அதிகம் வரும். அதனால், காய்கறித் தோட்டம் வைக்கிற இடத்தில் செம்பருத்தி வைப்பதைத் தவிர்க்கவும். அது காய்கறிச் செடிகளையும், குரோட்டன்ஸையும் தாக்கும். எனவே கூடியவரையில் பூச்சிகள் தாக்காத செடிகளை வைப்பது சிறந்தது. செம்பருத்தி வைத்தே ஆக வேண்டும் என்றால் நாட்டு செம்பருத்தி சிறந்தது. அதன் இலை மற்றும் பூக்களுக்கு மருத்துவகுணம் அதிகம். அழகுப் பராமரிப்பிலும் பயன்படும்.

‘மேரிகோல்ட்’ எனப்படுகிற சாமந்தியை நம் தோட்டத்தில் வளர்த்தால், தோட்டத்தில் நூற்புழு தாக்கம் இருந்தால், அதன் தாக்கத்தை இது ஓரளவுக் கட்டுப்படுத்தும். இது பார்வைக்கும் அழகு. சுலபமாக வளரக்கூடியது.இடமே இல்லை என்பவர்கள் தொட்டியில் வைக்கும் போது, ஒவ்வொரு செடியாக வைக்க வேண்டாம். 2 செம்பருத்தி, 2 பொகேன் வில்லா... இப்படி இரண்டிரண்டாக 10 செடிகள் வைக்கலாம். 2 முதல் 4 மணி நேரம் வெயில் படும்படியான இடத்தில் இருந்தால்தான் பூக்கும். வெயிலுக்கு வாய்ப்பே இல்லை... நிழலாகத்தான் இருக்கும் என்றால் கிழக்கு அல்லது மேற்கு பார்த்த ஜன்னல்கள் இருந்தால் அங்கே வைக்கலாம். அதன் மூலம் காலை வெயில் அல்லது மாலை வெயில் செடிகளின் மேல் படும்.

நிழலில் பூக்கக்கூடியது ஸ்பாத்திபில்லம்’ (Spathiphyllum) எனப்படுகிற ஒரு செடி. வெள்ளையாகப் பூக்கக்கூடிய இது, மரத்தடி நிழலில் வைத்தால்கூடப் பூக்கும்.
பூந்தோட்டம் அமைப்பதென முடிவு செய்து விட்டால், முதலில் வீட்டிலுள்ள எல்லோரிடமும் கலந்து பேசுங்கள். அவரவர் விருப்பம் அறிந்து பிறகு நர்சரியில் போய் வாங்கலாம். சிலது நாற்றாகக் கிடைக்கும். சிலது விதைத்து வளர வைக்கலாம். சிலதை தெரிந்தவர்களிடமிருந்து வாங்கி வரலாம். உங்கள் வீட்டுப் பூந்தோட்டத்தைப் போலவே வீட்டாரின் உள்ளங்களிலும் உற்சாகம் மலரட்டும்!

ஒரு வீட்டில் பல மனநிலையில் உள்ள நபர்கள் இருப்பார்கள். எனவே நம்முடைய பூந்தோட்டத்தில் இத்தனை வண்ணங்களின் கலவையும் இருக்க வேண்டும்.

இடமே இல்லை என்பவர்கள் தொட்டியில்  வைக்கும் போது, ஒவ்வொரு செடியாக வைக்க வேண்டாம். 2 செம்பருத்தி,2 பொகேன்  வில்லா.. இப்படி இரண்டிரண்டாக 10 செடிகள் வைக்கலாம்.

எழுத்து வடிவம்: மனஸ்வினி

படம்: ஆர்.கோபால்