எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம்...





‘பில்லா’ படத்துக்குப் பிறகு அஜித்துடன் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இணைந்துள்ள படம் ‘ஆரம்பம்’. ‘‘இந்தப் படத்தின் முழுக் கதையை இப்போது சொல்லி விட்டால் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் குறைந்துவிடும்...’’ என்று சிரித்த விஷ்ணுவர்த்தன், தொடர்ந் தார்:

‘‘முதலில் டைட்டில் விஷயத்துக்கு வருகிறேன். இந்தப் படத்துக்காக பல நூறு டைட்டில் எழுதி பார்த்தோம். ஆனால், ‘ஆரம்பம்’தான் கதைக்கு பொருத்தமாக இருந்தது. ஒரு தனி மனிதனின் போராட்டத்தின் ஆரம்பம்தான் படத்தின் ஒரு வரிக் கதை. மும்பைதான் கதைக்களம் என்பதால் பெரும்பாலான காட்சிகளை அங்கு படமாக்கினோம்.



அஜித்துடன் ஏற்கனவே வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் உரிமை எடுத்து வேலை பார்க்க முடிந்தது. இதில் ஆர்யாவின் பங்களிப்பும் பேசப்படும் விதத்தில் இருக்கும். ‘பில்லா’வில் நயன்தாரா டூ பிஸ் உடையில் நடித்ததால் இந்தப் படத்திலும் அவருக்கு அதுபோல் க்ளாமர் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இதில் அவருக்கு மட்டுமல்ல டாப்ஸிக்கும் டீசன்ட் ரோல்தான். இருவருக்கும் படத்தில் சமமான முக்கியத்துவம் இருக்கும்.

தவிர, டகுபதி ராணா, கிஷோர், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்ரேக்கர், முன்னாள் நாயகி சுமா ரங்கநாத் என பலர் நடித்திருக்கிறார்கள். அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். யுவன் சங்கர்ராஜா இசையில் பாடல்கள் அட்டகாசமாக வந்துள்ளன. இது அஜித் ரசிகர்கள் உட்பட அனைத்துத் தரப்பு ரசிகர்களும் விரும்பி பார்க்கும் படமாக இருக்கும்...’’ என்கிறார் விஷ்ணுவர்த்தன்.
- எஸ்