5 பன்ச்சு : அமீர்





மதுரையில் பொருளாதாரம் படித்தவர். எம்.ஜி.ஆர் மற்றும் கமல் படங்களின் கமர்ஷியல் பார்முலாவுக்கு தீவிர ரசிகர். தன் நண்பன் பாலாவிடம் ‘சேது’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து, கல்லூரி காட்சியிலும் நடித்தார்.

இயற்பெயர், அமீர் சுல்தான். மனைவி, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். ‘டீம் ஒர்க் புரொடக்ஷன் ஹவுஸ்’ மூலம் படம் தயாரிக்கிறார். ‘யோகி’, ‘ஆதி-பகவன்’ படங்களில் யுவன்சங்கர்ராஜா இசையில் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.
 
சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ மூலம் இயக்குநர் ஆனார். பிறகு ஜீவாவை வைத்து ‘ராம்’, கார்த்தியை அறிமுகம் செய்து ‘பருத்திவீரன்’, இரண்டு ஜெயம் ரவிகளை வைத்து ‘ஆதி-பகவன்’ படங்களை இயக்கினார்.

சுப்ரமணியம் சிவா இயக்கிய ‘யோகி’ படத்தில் ஹீரோ ஆனார். ‘யுத்தம் செய்’ படத்தில், ‘கன்னித்தீவு பொண்ணா...’ பாடலுக்கு ஆடினார். இப்போது ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

‘சேது’ படத்துக்கு முன் டி.வி தொடரில் நடித்துள்ளார். மதுரையில் மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியுள்ளார். ஆன்மிகவாதி. இயக்குநர் சங்க செயலாளராக பதவி வகித்தார். இப்போது, சினிமா ‘பெப்சி’ அமைப்புக்கு தலைவர்.
- தேவராஜ்