காலமெல்லாம் காத்தருளும் கந்தன்



காவளூர்

சோழ மன்னர்கள் நல்லாட்சி புரிந்து நாட்டை தழைத்தோங்கச் செய்த காலமது. வீராதிக்கம் புரிந்த அவர்கள், பக்தி மணத்தையும் கமழச் செய்தார்கள். அவர்களில் முதலாம் பராந்தகச் சோழன், தன் ஆட்சி அதிகாரங்களோடு தெய்வ நம்பிக்கையையும் சிறப்புற பரப்பினான். இவனுடைய ஆட்சியில் எதிரிகள் நான்கு திக்குகளிலும் திசைமாறி ஓட்டம் பிடித்தனர்.

 அவர்களை வெல்ல மதிநுட்பத்தோடு செயல்பட மன்னனுக்கு தேவையான ஆலோசனைகளை அளித்திட்டவரே வில்லவப் பேராயன் எனும் முதன்மை மந்திரி. இவர் தஞ்சையைஅடுத்த திருக்காவளூர் என¢றழைக்கப்பட்டு தற்போது காவளூராக மருவிய க¤ராமத்தில் பிறந்தவர்.

மன்னனுக்கு ஆலோசனைகள் சொல்வது ஒரு பக்கம் இருந¢தாலும் சிவநெறிச் செல்வராகவும் திகழ்ந்தவர் வில்லவப்பேராயன். தான் உண்ண மறந்தாலும், உறங்காதிருந்தாலும் ஈசனை வணங்க மட்டும் மறக்காதிருந்தார். தஞ்சையின் எல்லைக் குட்பட்ட அனைத்து சிவாலயங்களையும் தினமொரு ஆலயமாக சென்று வணங்கினார். தன் அதிகாரத்தை ஆன்மிக திருப்பணி செய்ய பயன்படுத்தினார். இரண்டு சொட்டு எண்ணெய் வாங்குவது, மதில் சுவர் கட்டித் தருவது என்று சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.

இவற்றிற்கு ஆதாரமாக திருச்சோற்றுத்துறை ஓதனவனேஸ்வரர் மற்றும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில்களுக்கு அவர் சென்று வழிபட்டதாக கல்வெட்டுகள் பேசுகின்றன. கோயிலுக்கு தேவையான திருப்பணியையும், கோயில்களை பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகளையும் செய்தார். இன்றளவும் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள ஒரு கல¢வெட்டு, வில்லவப்பேராயனைப் பற்றி விரிவாகச் சொல்கிறது. சிவநெறிச் செல்வனான வில்லவப்பேராயனை சிவபுத்திரனான ஆறுமுகப் பெருமான் ஆட்கொண்டார்.

  முதலாம் பராந்தக மன்னனின் அரச குருவான வில்லவப்பேராயன் தன் சொந்த ஊரான திருக்காவ ளூரில் தன்னுடைய இஷ்ட தெய்வத்திற்கென்று  கோயில் கட்ட வேண்டுமென்று பேரவா கொண்டிருந்தார். மன்னனிடம் இதுபற்றி கேட்டபோது, “இது உங்கள் ஊர்; உங்களுக்கு பிடித்த கோயிலை உங்கள் விருப்பப்படி கட்டிக் கொள்ளுங்கள்” என்று உடனே அனுமதி அளித்தான். வில்லவப்பேராயனோ திக்குமுக்காடிப் போனார். இவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்க வேயில்லை. கோயிலின் வேலையை அன்றே தொடங்கினார் அமைச்சர். அதோடு, கோயில் வேலையே தன் முதல் கடமை என்று இன்னும் ஆழ்ந்து போனார்.

  கோயிலை கட்ட திட்டமிட்டபோது வில்லவப்பேராயன், ‘குமரன் குடி கொண்ட கோயில்கள் எல்லாம் குன்றின் மீதல்லவா இருக்கின்றன; ஆனால், தஞ்சையின் எல்லைக்குட்பட்ட பகுதி எங்கும் குன்றே இல்லையே’ என்று கவலையுற்றார். ஆனால், அவருக்குள் திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. இங்கே குமரனுக்கு குன்று இல்லாவிட்டால் என்ன. நாமே ஒரு குன்றை உருவாக்கு வோம் என்று தீவிரமாக யோசித்தார்.

ஜோதிடத்தில் சிறந்தவரான பேராயருக்கு ராசிகளையே படிக்கட்டுகளாக்கி அவற்றை ஆளும் ஆறுமுகத்தானை உச்சியில் அமர்த்தலாமே என்று முற்றிலும் புதியதோர் சிந்தனை உதித்தது. வேதியர்களை திரட்டினார். கிரகங்களின் மூல சக்தியையும், அவை சஞ்சரிக்கும் ராசியின் வீர்யமும் எந்தெந்த மந்திர அதிர்வுகளில் உள்ளன என்று ஆலோசித்தார்.

அவற்றை கல்லில் பொதித்து, வேதமந்திரங்கள் சொல்லி, சாந்நித்தியத்தை உண்டாக்கி விடலாம் என்று எண்ணி மகிழ்ந்தார். வேத விற்பன்னர்கள் தினமும் வேதமோதினர். கிரகங்களின் சாந்நித்தியத்தையும், ராசிகளின் தன்மைகளையும் மந்திரத்தின் ஈர்ப்பு சக்தியால் இழுத்து அருவமாக பொதித்தனர். தரை தளத்திலிருந்து பன்னிரெண்டு படிகள் அமைந்து ஒரு மாடக் கோயில் போல கோயில் உருவானது. அது தவிர இந்த பன்னிரெண்டு ராசிப்படிகளையும் பிரதிஷ¢டை செய்தபோது அந்தந்த ராசியை சேர்ந்தவரையும் தேடிப்பிடித்து அவர் மூலமாக ஒவ்வொரு கல்லையும் நிர்மாணித்தார்.

 கோயிலை கட்டியபோது ஒவ்வொரு மண்டபமும் சற்றே உயர்ந்து உச்சியில் ஆறுமுகம் அமர்ந்திருக்க வேண்டுமென்று நினைத்தார். அதுபோல ஆறுமுகனுக்கு ஆறு மண்டபங்கள் அமைக்கப்பட்டு ஆறாவது மண்டபத்தில் பெருமானை எழுந்தருள வைத்தார். இந்த ஆறு மண்டபங¢களையும் கடந்து சென்று ஆறுமுகனை தரிசிக்கும் போது மெய்சிலிர்க்கிறது; வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல இடர்களையும் தாமாகக் களையும் ஆறுதல் கிடைக்கிறது. ராசிப்படிகளில் மேலேறும் போதே கிரகங்களின் ஆதிக்கத்திற்கு அதீதமானவனாக ஆறுமுகன் விளங்குகிறான் என்பதனை உணரமுடிகிறது. ஆறுமுகத்தானை வணங்க நம் வாழ்க்கை என்றும் ஏறுமுகம் தான் என்பதும் புரிகிறது.  

ஆறுமுகப் பெருமான் ஆறாவது மண்டபத்தில் வள்ளி-தெய்வானையோடு அமர்ந்திருக்கும் கோலம் காண நமக்குள்ளும் ஒரு கம்பீரம் பிறக்கிறது. இந்தத் தலத்தில் வள்ளி, முருகனின் பேரழகை பார்த்து வெட்கப்பட்டு தலைகுனிந்த நிலையில் இருக்கிறாள். இரண்டாம் மண்டபத்தின் தென்பகுதியில் வடக்கு நோக்கி, கரங்கள் சேவித்தபடி நின்ற நிலையில் வில்லவப்பேராயனின் சிற்பம் காணப்படுகிறது.

 அவர் கரங்களுக்கு இடையில் ருத்ராட்ச மாலை கொண்டும், காதினில் ருத்ராட்ச குண்டலமும், கழுத்தினில் ஆரமும், கை மணிக்கட்டில் ருத்ராட்ச வளையமும் அணிந்து சிவாம்சம் கொண்டவராக உள்ளார். இடையில் குறுவாள் உறை, முறுக்கேறிய மீசை, கனிந்த புன்னகை, சற்றே இடதுபுறம் சர¤ந்த கொண்டை என்று விளங்குகிறார்.

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது. தலத்தின் மேன்மை அவரை இங்கேயே தங்க செய்தது. முருகப் பெருமானுக்கு பல்வேறு தொண்டுகள் புரிந்து சென்றுள்ளார் அருணகிரிநாதர். அதனால் அவருக்கும் இக்கோயிலில் அழகியதோர் ச¤ற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் உள்ளே நுழைந்ததும் தென்புறத்தில் காசி விஸவநாதரும், வடபுறத்தில் விசாலாட்சி அம்பாளும் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர். அன்னை விசாலாட்சிக்கு எதிரே மேற்கு நோக்கி சூரியனும், பைரவரும் அருள்பாலிக்கின்றனர்.

கந்தப் பெருமான் செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை ஆவார். அங்காரக தோஷம் எனப்படும் செவ்வாய் தோஷத்தால் வரும் திருமணத் தடையையும், ரத்த சம்பந்தமான நோயையும் தீர்த்து வைப்பார். பன்னிரெண்டு ராசிக்காரர்களும் அவரவர் பிறந்த ராசிக்குரிய படிக்கட்டில் அகல் தீபம் ஏற்றி வழிபட்டால் அவரவர் ராசியை தொற்றியுள்ள துர் பலன்கள் முற்றிலுமாக விலகி, நற்பலன்கள் முழுமையாக அடையப் பெறுவார்கள் என்பது பல பக்தர்களின் அனுபவபூர்வமான நம்பிக்கை. 

பிதுர்காரகன் என்றழைக்கப்படும் சூரியனும், மாதுர் காரகனான சந்திரனும் பல கோயில்களில் காணப்படுவர். ஆனால், இத்தலத்தில் பிதுர்காரகனான சூரியன் மட¢டுமே உள்ளார். அதனால், பிதுர்கர்மா செய்ய வேண்டியவர்கள் வெட்டாற்றங்கரையில் ஆடி, தை மாத அமாவாசைகளில் திதி, தர்ப்பணம் கொடுத்துவிட்டு காசி விஸ்வநாதர், விசாலாட்சியை வணங்கிய பின் ஆறுமுகப் பெருமானை வழிபட்டால், முன்னோர்கள் திருப்தியடைவார்கள், குலத்தை தழைக்கச் செய்வார்கள் என நம்பப்படுகிறது.

திருக்காவளூர் எனும் பெயருக்கேற்றவாறு அங்குள்ள மக்கள் காலமெல்லாம் ஒருவருக்கு ஒருவர் காவலாக அன்புப் பிடியை எந்நாளும் தளர்த் தாது ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இன்றளவும் பழமை மாறாமல் பாரம்பரியத்தையும் கடைபிடித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்து நதிகள் எல்லாம் நாலா திசைகளிலும் பாய்ந்து, சோழநாட்டை சோறுடைய நாடாக்கி செல்வம் கொழிக்க வைத்தன.

ஆனால், திருக்காவளூரைச் சுற்றி பாயும் வெட்டாறு என்றென்றும் ஜீவநதியாக தெற்கிலிருந்து வடக்கு  நோக்கி பாய்ந்து வியக்கச் செய்கிறது. இந்த ஆற்றில் நீராடிவிட்டு நிமிர்ந்தால், அரை கிலோ மீட்டர் தொலைவில் ஆறுமுகப் பெருமானின் திருக்காட்சியை காணமுடியும். தஞ்சையிலிருந்து நெடார் வழியாக 16 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். தஞ்சைக்கு அருகேயுள்ள அய்யம்பேட்டை கோவிலடியிலிருந்து7 கி.மீ. தொலைவ¤லுள்ள அகரமாங்குடி வழியாகவும் சென்று காவளூரை அடையலாம். தஞ்சையிலிருந்து தனி வாகனத்திலும் செல்லலாம்.

வேங்கை வி.சுந்தர்ராஜ்
படங்கள்: சி.எஸ். ஆறுமுகம்