இந்தக் கடிதத்தின் எடை 5 கிலோ!



கேரளாவைச் சேர்ந்த இளைஞரான கிருஷ்ணபிரசாத்துக்கு தனது சகோதரி கிருஷ்ணபிரியா என்றால் உயிர். இருவரும் இரட்டையர்கள் போல வலம் வந்தனர். திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் ஒரே வண்ணத்தில்தான் உடை அணிவார்கள்.
தனது சகோதரனுக்கு சகோதர தின வாழ்த்துகளை கிருஷ்ணபிரியா சொல்லவில்லை. வருத்தமடைந்த கிருஷ்ணபிரசாத் தனது சகோதரியின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஏதோ வேலையில் பரபரப்பாக இருந்ததால் சகோதரனின் அழைப்பை  கிருஷ்ணபிரியா ஏற்கவில்லை.

மனமுடைந்த கிருஷ்ணபிரசாத், கிருஷ்ணபிரியாவுக்கு போன் செய்வதை நிறுத்திவிட்டார். அத்துடன் வாட்ஸ் அப்பிலும் பிளாக் செய்துவிட்டார். கிருஷ்ணபிரசாத்தை சமாதானப்படுத்துவதற்காக ஒரு கடிதத்தை எழுத ஆரம்பித்தார் கிருஷ்ணபிரியா.

சகோதரன் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் அந்தக் கடிதத்தை எழுதி முடிக்க 12 மணி நேரம் ஆகியிருக்கிறது. 434 மீட்டர் தூரத்துக்கு நீண்டு செல்லும் கடிதத்தின் எடை 5 கிலோ. இக்கடிதம் வைரலானதோடு கின்னஸ் சாதனை கமிட்டிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

த.சக்திவேல்