மகர ராசியில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்





பன்னிரெண்டு ராசிகளிலேயே ஆழமான, அகலமான ராசி மகரம். அனைத்துத் துறைகளைப் பற்றிய அறிவையும் பெற்றிருப்பீர்கள். தெரியாததை தெரிந்தது போலவும், தெரிந்ததை தெரியாதது போலவும் காட்டி, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வீர்கள். இதனாலேயே நீங்கள் வெற்றியும் பெறுவீர்கள்; உங்களை யாராலும் அழிக்க முடியாது. ஆனால், உங்களுக்கு நீங்கள்தான் எதிரி என்பதை மறந்து விடாதீர்கள். இலக்கை அடையும் வரை வேகமாக ஓடும் நீங்கள், அடைந்தவுடன் ஏற்படும் அலட்சியத்தால் அடைந்ததை இழந்து மீண்டும் பெறுவீர்கள்.

வேலை பார்த்துக் கொண்டே வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் நீங்கள். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதன் ஆணிவேர் முதல் நுனி இலை வரை பதம் பார்த்துவிட்டுத்தான் குதிப்பீர்கள். அதனால் எதைத் தொட்டாலும் ஜெயித்துக் காட்டுவீர்கள். ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தால் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பீர்கள். உங்களைப் போன்று களப்பணி யாராலும் செய்ய முடியாது. அதிலும் பயணம் செய்தபடியே வேலை செய்வது மிகவும் பிடிக்கும்.

உங்களின் உத்யோக ஸ்தானத்திற்கு துலாச் சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், தராசு சின்னத்தைத் தாங்கியிருப்பதாலும், எப்போதும் வியாபாரச் சிந்தனையோடு இருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் கூட, ‘வேலைக்குப் போகிறோம், சம்பளத்தை வாங்குகிறோம்’ என்று இல்லாமல், கம்பெனியின் லாப நஷ்டக் கணக்குகளை தெரிந்து வைத்திருப்பீர்கள். ‘‘இதுபோல நாம ஒரு தொழிலை ஆரம்பிச்சோம்னா பெரிய ஆள் ஆகறதுக்கு எத்தனை வருடமாகும்’’ என்று மனக்கணக்கும் போடுவீர்கள். துலாச் சுக்கிரன் பத்தாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால், மேலிடத்திற்கு யதார்த்தமான ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்.

புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும், குடும்பத் தொழில், கூட்டாளிகளோடு கூட்டு வியாபாரம், கைத்தொழில் என்று நிறைய கற்று வைத்திருப்பீர்கள். கடைசி வரை ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வூதியம் வாங்குபவர்கள் உங்களில் ஒரு சிலரே. எந்த வேலையை செய்தாலும், அதில் ஒரு நேர்த்தி இருக்கும்; முழுமை இருக்கும். உங்களுக்கு களத்திரகாரகனாக சுக்கிரன் இருப்பதால், திருமணத்திற்குப் பிறகுதான் அதிக சம்பளத்துடன் கூடிய கௌரவமான உத்யோகம் கிடைக்கும். ‘உத்யோகமா... வியாபாரமா... முதலாளியா... தொழிலாளியா...’ என்கிற போராட்டங்கள் வெகு வருடங்கள் உள்ளுக்குள் இருக்கும். இதனாலேயே பல வேலைகளில் உங்கள் நிலை திரிசங்கு சொர்க்கம்தான். எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்; அதனாலேயே வேலையை இழந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள். ‘மகரத்தார் நகரத்தை ஆள்வார்’ என்பது பழமொழி. அதுபோல உங்களில் பெரும்பாலானோருக்கு நல்ல நிர்வாகத்திறன் இருக்கும். மகரம் என்பது கடல் வீடு. கடலலை எப்படி அடுத்தடுத்து வந்து முட்டுமோ, அதுபோல மனதிற்குள் புதுப்புது ஆலோசனைகள் வந்தபடி இருக்கும்.  

பத்தாம் இடமான வேலை மற்றும் கர்ம தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மத்திம வயதுக்குப்பிறகு சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். நிறைய பேர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் லாபம் சம்பாதிப்பீர்கள். பணமும், புகழும் சேர்ந்து எங்கு அதிகம் புழங்குகிறதோ, அங்குதான் வேலை பார்ப்பீர்கள்; உயர் பதவியில் அமருவீர்கள். சுக்கிரனால் கலைத்துறையோடு எப்போதும் நெருங்கி இருப்பீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். மேலும், சம்பாத்தியத்தோடு சேர்ந்து லாபமும் இருப்பதால் லாப ஸ்தானத்தையும் பார்க்கலாம். உங்களின் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால் மூத்த சகோதரரோடு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். அதேசமயம் பங்குதாரர்களோடு தொழில் செய்யும்போது, பேச்சு பேச்சாக இருக்க வேண்டும்; பேப்பரில் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்க வேண்டும் என்று தீர்மானமாக இருங்கள்.



உத்திராட நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொஞ்சம் கோபக்காரர்களாகவும் நேர்மையாளர்களாகவும் இருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் நெருப்பாக இருப்பீர்கள். மேலதிகாரியே சொன்னாலும் தவறு செய்ய அஞ்சுவீர்கள். மேலிடத்தை அனுசரித்துப் போகாதிருப்பதால் பல சறுக்கல்களை சந்திப்பீர்கள்.

மகர ராசிக்குள் வரும் உத்திராடம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பெட்ரோ கெமிக்கல், எரிபொருள், வனத்துறை அதிகாரி, தோட்டக்கலை, சுரங்கத்துறை, மருந்து கம்பெனி, சுகாதாரத்துறை, சரும நோய் மருத்துவர், இ.என்.டி. டாக்டர், கனிம, கரிமத்துறை, சினிமாவில் கேமராமேன், நடிகர் என்று பல துறைகளில் கால் பதிப்பீர்கள். வியாபாரமெனில் லாட்ஜ், ஹோட்டல், பெட்ரோல் பங்க், மீன் பண்ணை, சினிமா ரெக்கார்டிங் ஸ்டூடியோ, டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ், காய்கனி கடை, பருப்பு மண்டி, கட்டிட வேலைகளுக்கான பொருட்கள் விற்பனை என்று வளமாக வாழ்வீர்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த்துறை, கருவூலம், கார் மெக்கானிக், போக்குவரத்துக் கழகம், வனவிலங்கு சரணாலயம், இரும்பு உருக்காலை, மீன் பிடித்தல், படகு கட்டுமிடம் என்று பல்வேறு இடங்களில் வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில், அச்சுத் தொழில், சிமென்ட் தொழில், கல் குவாரி, பாத்திரக் கடை, இரும்புக் கடை, எண்ணெய் கம்பெனி, ரியல் எஸ்டேட், பியூட்டி பார்லர், இறைச்சிக் கடை, டிபன் கடை, நெடுஞ்சாலையோர உணவகம் என்று ஈடுபட்டால் வெற்றி பெறலாம். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் வங்கி, மெரைன் எஞ்சினியர், கப்பல் படை, நெடுஞ்சாலைத்துறை, ஆங்கில ஆசிரியர், கடன் வாங்கித் தரும் ஏஜென்ட், ஆயுள் காப்பீட்டுக் கழகம், வக்கீல், குழந்தை நல மருத்துவர், மனநல மருத்துவர், சூரிய சக்தி மின்சார சாதனங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணி, அனல் மின் நிலையம், இந்து அறநிலையத்துறை என்ற துறைகளில் வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில், திருமணத் தகவல் மையம், பழச்சாறு கடை, புத்தகக் கடை, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு விற்பவர், புத்தக வெளியீட்டாளர், தங்க முலாம் பூசுதல், மரக் கடை, கடல் உணவகம் என்று தொடங்கினால் வெற்றி பெறலாம்.  

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செல்வ நிலையில் ஏற்ற இறக்கம் இருந்தபடி இருக்கும். பணம் நிறைய வரும்போதே வாரி வாணம் விடாது பத்திரப் படுத்துங்கள். வேலையில் எத்தனை சுமை இருந்தாலும் உணர்ச்சிகளை உள்ளே சிறை வைக்காமல் ரசனையோடு வெளிப்படுத்துவீர்கள். கண்மூடித்தனமாக யாரையும் நம்பக் கூடாது என்பதை அலுவலகத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்.
திருவோணம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சினிமாவில் நடிப்பு, தியேட்டரில் வேலை, ஷேர் மார்க்கெட் அலுவலகத்தில் பணி, சிவில் அண்ட் கெமிக்கல் எஞ்சினியர், போலீஸ், ராணுவம், எலெக்ட்ரீஷியன், ஆயுதக் கிடங்கு, ஜெயிலர் என்று சில துறைகளில் வேலை கிடைத்தால் முன்னேற்றம் இருக்கும். வியாபாரமெனில் சி.டி. கடை, ஐஸ்க்ரீம், நகைக்கடை, காய்கறிக் கடை, மண்டி, குடோன்களை வாடகைக்கு விடுதல், கார் ஷோரூம், ரியல் எஸ்டேட், பீடா கடை, பான் புரோக்கர், ஜிம் வைத்து நடத்துதல் என்று ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் காவல் துறையில் எழுத்தர், சி.பி.ஐ., வெடிகுண்டு நிபுணர், போக்குவரத்துத் துறை, கூட்டுறவு வங்கி, சாப்ட்வேர் எஞ்சினியர், அரசு தோட்டக்கலை, கண்ணாடித் தொழிற்சாலையில் வேலை, படக் கம்பெனியில் வேலை, புகைவண்டி, பேருந்தை இயக்குபவர், ஜவுளிக் கடை என்று வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில், மினரல் வாட்டர், சாப்ட்வேர் எஞ்சினியர், ஏற்றுமதி இறக்குமதி, கடல் வணிகம், மிக்ஸி, கிரைண்டர் விற்பனையாளர், பர்னிச்சர் மார்ட், டிரை கிளீனிங், படப்பிடிப்பு சாதனங்களை வாடகைக்கு விடுதல் என்று தொழில் நடத்தி ஆதாயம் பெறுவீர்கள்.



3ம் பாதத்தில் பிறந்தவர்கள் கவிஞர், தமிழ்ப் பேராசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பா ளர், ரேடியோ நிலையங்களில் வேலை, நூலகர், கிரிக்கெட் கோச், பேப்பர் மில், பத்திரம் சரிபார்ப்பவர், டெலிபோன் துறை என்று சில வேலைகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரமெனில் பிரின்டர், பெட்டிக் கடை, பால், தண்ணீர் விற்பவர், எலெக்ட்ரானிக்ஸ் கடை, ஷேர் மார்க்கெட், வெள்ளி ஆபரணங்கள் விற்பனை, கமிஷன் மண்டி, உரக் கடை என்று தொழிலில் இறங்கினால் பெருத்த லாபம் உண்டு. 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் கதை, பாடல், வசனகர்த்தா, தரக் கட்டுப்பாட்டு அதிகாரி, நீர்மின்நிலையப் பணி, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, குடிநீர் வடிகால் வாரியம், டிரான்ஸ்போர்ட் அதிகாரி, உளவியல் நிபுணர் என்று சில குறிப்பிட்ட துறைகளில் முயற்சித்தால் நல்லவிதமாக அமர்ந்து விடலாம். வியாபாரமெனில் லாட்ஜ், ஸ்வீட் ஸ்டால், ஜூஸ், கண்ணாடி ஃபிரேம், துணிக்கடை, காலணி, மெடிக்கல்ஸ், வெள்ளி வியாபாரம் என்று இறங்கி சாதிப்பீர்கள்.  

அவிட்டத்தின் முதல் இரண்டு பாதங்கள் இதில்தான் வருகின்றன. இதற்கு செவ்வாய் வருகிறார். பொதுவாகவே செவ்வாயை சீற்றமுள்ள கிரகமாகத்தான் சொல்வது வழக்கம். மேலும் சனியினுடைய வீட்டில் இருப்பதால் எப்போதுமே வேலை விஷயத்தில் உடனடியாக ஒரு முடிவுக்கு வராமல் அவஸ்தைப்படுவீர்கள். முதல் பாதத்தைச் சேர்ந்தவர்கள் உயர் பதவியில் அமர்பவர்களுக்கு பி.ஏ.வாக இருப்பார்கள். இன்டீரியர் டெக்கரேஷன் பணியைச் செய்வார்கள். பூங்காக்களை அமைத்துத் தருதல் போன்ற வேலைகளை ஈடுபாட்டோடு செய்வார்கள். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் காவல்துறை அதிகாரி, ராணுவம், தனியார் செக்யூரிட்டி கம்பெனி, வங்கி, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி, ஹோட்டலில் சீப் குக், பஸ் கண்டக்டர், நில அளவையாளர் போன்ற வேலைகளுக்கு முயற்சித்தால் உடனடியாக கிடைக்கும். வியாபாரமெனில், நர்சரி கார்டன், டெக்ஸ்டைல், பீங்கான் வகையறா பொருட்கள் போன்ற தொழிலில் இறங்கினால் பெருத்த லாபம் பெறலாம். கம்ப்யூட்டர் உதிரிப் பாகங்கள், ஆட்டோமொபைல் ஷாப் போன்றவற்றை வைத்து நடத்தலாம்.  இந்த நட்சத்திரத்தின் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு சீருடை அணிந்து தான் வேலைக்குப் போவார்கள். நாட்டின் பாதுகாப்புப் பணிகளில் இவர்கள் அமர்த்தப்படுவார்கள். தீயணைப்பு நிலையம், உருக்காலைகள், சட்டம் ஒழுங்கு, எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த கடைகள் வைத்தல் என்று ஈடுபடுவார்கள். வியாபாரமெனில் உரம், யூரியா, மருந்துக் கடை போன்ற கடைகள் வைப்பார்கள். பெட்ரோல் பங்க், பதிப்பகத் துறையில் ஈடுபட்டால் பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.  

மகர ராசிக்கு வேலை ஸ்தானமாகவும், பத்தாம் இடத்திற்கு அதிபதியாகவும் துலாச் சுக்கிரன் வருகிறார். எனவே, மிகவும் சக்திமிக்க அம்பாளை வணங்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அம்மன் தலம்தான் பூவனூர். நெல்லையை ஆண்ட மன்னன் குழந்தைப் பேறின்றி தவித்தான். சிறந்த சிவபக்தனான இவன் கனவில் நெல்லையப்பர் தோன்றினார். உமையன்னை உனக்குக் குழந்தையாகவும், பராசக்தியின் அம்சமான சாமுண்டியே செவிலித் தாயாகவும் வருவாள் என்றார். தாமிரபரணியில் மூழ்கியெழுந்தவனின் கைகளில் சங்கு ஒன்று தட்டுப்பட்டது. அழகுக் குழந்தையாக அதுவே மாறியது. அருகேயே செவிலித் தாயாக சாமுண்டியும் உடன் நின்றாள். குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டனர். குழந்தை வளர்ந்து பெண்ணானாள். சதுரங்க ஆட்டத்தில் சிறந்து விளங்கினாள். அவளை ஜெயிப்பதற்கு இவ்வுலகில் எவராலும் இயலவில்லை. அப்போதுதான் மன்னன் எல்லோரோடும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். பூவனூரை அடைந்தார்கள். இத்தல புஷ்பவனநாதர் சித்தர் வேடத்தில் வந்தார். எவராலும் ஜெயிக்க முடியாத ராஜராஜேஸ்வரியை வெற்றி பெற்று மணமுடித்தார். இன்றளவும் இத்தலத்தில் ராஜராஜேஸ்வரியும், சாமுண்டீஸ்வரியும் தனித்தனி சந்நதிகளில் அருள்கின்றனர். மைசூருக்கு அடுத்து சாமுண்டீஸ்வரிக்கு தனிச் சந்நதி அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் பாமணி ஆற்றின் மேல்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)