காரணம்



கு.அருணாசலம்

மனைவியோடு ஓட்டலுக்குப் போயிருந்தேன். ஆர்டர் கேட்க வந்த சர்வர் கொஞ்சமும் என்னை மதிக்காமல் என் மனைவி பக்கமே போய் நின்று ‘‘என்ன வேணும் மேடம்?’’ என்றான்.
‘‘ஆளுக்கு ஒரு சப்பாத்தி!’’ - அவள் சொல்லி அனுப்பினாள்.கொண்டு வந்து வைத்து விட்டு மீண்டும் அவளிடமே, ‘‘வேற ஏதாவது மேடம்..?’’ என்றான்.
‘‘ரெண்டு ஊத்தப்பம்!’’

அதையும் கொண்டு வந்து வைத்தவன், ‘‘காபி வேணுமா’’ என்பதையாவது என்னைப் பார்த்துக் கேட்பான் என எதிர்பார்த்தேன். ம்ஹும்... அதையும் அவளிடம்தான் கேட்டான். கடைசியாக பில் கொண்டு வரும்போது மட்டும் நேராக என் பக்கம் வந்து நீட்டினான்.‘‘ஏன்யா... சாப்பிட என்ன வேணும்னெல்லாம் அங்க கேக்கறே... பில்லை மட்டும் என்கிட்ட தர்றே! அதையும் அங்கேயே தர வேண்டியதுதானே!’’ என்றேன் கிண்டலாக.

சர்வர் சலனப்படவில்லை. ‘‘சார்! உங்களை பார்த்ததுமே, மனமொத்த தம்பதிகளா தெரிஞ்சீங்க. உங்களுக்கு என்னென்ன பிடிக்கும். எதை சாப்பிட்டா உடம்புக்கு ஒத்துக்கும்னு உங்க மனைவிக்குத்தான் தெரியும். அதான், அவங்ககிட்ட ஆர்டர் கேட்டேன்!’’ என்றான்.‘‘என்னங்க! டிப்ஸ் ஒரு பத்து சேர்த்துக் கொடுங்க!’’ - என் மனைவி என்னை உருட்டினாள்.