ரகசிய திருமணம் செய்துகொண்ட ஹீரோயின்



காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதற்கு ‘நாசிம்’ நடிகை மிகச் சரியான உதாரணமாகி விட்டார். நக்கல் செய்யும் தமிழ்ப் படத்தில் நடித்தபோது, தொப்புள் விவகாரத்தில் ‘டூப்’ நடிகையை நடிக்க வைத்ததால் தன் மானம் போய்விட்டது, கவுரவம் குப்புறக் கவிழ்ந்து படுத்துவிட்டது என்று அறிக்கை விட்டு களேபரம் செய்த அவர், இப்போது மலையாள மெகா ஸ்டாரின் மகனுக்கு ஜோடியாக தமிழிலும், மலையாளத்திலும் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


இந்தப் படத்தை எப்படி பிரபலமாக்குவது என்று யோசித்த படக்குழு, ‘நாசிம்’ நடிகை அந்த வாரிசு ஹீரோவை தீவிரமாக காதலிப்பதாக வதந்தியைக் கொளுத்திப் போட்டுள்ளது. எந்த மொழிக்குச் சென்றாலும் தன்னைப்பற்றி வரும் கிசுகிசுக்களை அடக்க முடியவில்லையே என்று வருத்தப்படும் நடிகை, இனி என்ன செய்வதென்று தெரியாமல் தந்தைக் குலத்திடம் ஐடியா கேட்டாராம். அவரும் இதைப் பெரிதுபடுத்த எண்ணாமல், ‘விடும்மா... காய்ச்ச மரம்தான் கல்லடி படும்’ என்று, மகளுக்கு நாசூக்காக பதில் சொல்லி மனதை மாற்றியிருக்கிறாராம்.

‘விண்ட் சைட்’ படத்தில் தன்னை மிகவும் மெச்சூரிட்டியாக காட்டியதாக நினைத்துப் புலம்புகிறாராம், அசின் சாயல் நடிகை. ‘கவர்ச்சிக்கு நான் மிகப் பெரிய எதிரி’ என்று சொல்லிக் கொண்டே தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடிக்கும் அவர், தமிழில் மட்டும் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார், ஒரு புரொடக்ஷன் மேனேஜர். அசின் சாயலில் இருப்பதால், தன்னையும் அந்த இடத்துக்கு கோலிவுட் அழைத்துச் செல்லும் என்று நம்பி ஏமாந்த அவர், இப்போது கிடைத்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு நடித்து, காலத்தைக் கடத்த முடிவு செய்துள்ளாராம்.

நாற்பது கேட்பதாகவும், 50 கேட்பதாகவும் ‘ஆனந்த பிரிய’ நடிகையைப் பற்றி நாளொரு வதந்தியும், பொழுதொரு கிசுகிசுவும் திட்டமிட்டே பரப்பப்பட்டு வருகிறதாம். இதையறிந்து கொதித்த நடிகை, ‘இந்த வதந்தியை யார் பரப்புறாங்கன்னு எனக்கு தெரியும். அவங்களை கடவுள் தண்டிப்பார்’ என்பதாக, மென்மையாக சாபம் விடுகிறாராம். இந்நிலையில், அவருக்குப் போட்டியாக களத்தில் குதித்துள்ள ‘வ.வா.ச’ திவ்ய நடிகை, ‘ஆனந்த பிரிய’ நடிகை எவ்வளவு தொகை கேட்கிறாரோ, அதில் பெரும்பகுதியை தள்ளுபடியாக அறிவித்து,

அவருக்கு செல்லும் சான்சுகளை தன் பக்கம் வளைத்துப் போடுவதில் குறியாக இருக்கிறாராம். முன்பெல்லாம் கிளாமரையும், பெர்பாமன்சையும் கலந்து காட்டும் ஹீரோயின்கள்தான் கடுமையாக சண்டை போடுவார்கள். இப்போது இவர்களைப் போன்ற பேமிலி இமேஜ் கொண்ட ஹீரோயின்களும் சண்டை போட ஆரம்பித்துள்ளது, கோலிவுட் ஏரியாவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.

முகத்தில் சிவப்புப் புள்ளி தோன்றியதால் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டதாக, மும்பையில் ‘லிங்கு’ இயக்கத்தில், ‘பிரகாச’ ஹீரோவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த ‘சமந்த’ நடிகையைப் பற்றி வேண்டுமென்றே வதந்தி பரப்பி விடப்பட்டதாம். ஏற்கனவே தோல் அலர்ஜி காரணமாக ‘ரத்ன’ மற்றும் ‘சங்கர’ இயக்கத்தில் இரு மெகா பட்ஜெட் படங்களில் நடிக்க முடியாத வேதனையில் இருந்த நடிகை, இப்போது ‘பிரகாச’ ஹீரோவுடனும் நடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்று அஞ்சினாராம். இதையறிந்த ‘லிங்கு’ இயக்குநர், ‘என்ன நடந்தாலும் சரி, நீங்கதான் என் ஹீரோயின். அதுல எந்த மாற்றமும் இல்லை’ என்று ஆறுதல் சொன்னாராம்.

‘வம்பு’ நடிகருடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள காதல் தோல்வி புகழ் ‘தாரா’, ஷூட்டிங் நடந்து முடியும்வரை எந்த மீடியாவும் தன்னை அணுகக்கூடாது என்று கறார் உத்தரவு போட்டுள்ளாராம். அப்படி யாராவது வந்தால், உடனே அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவேன் என்று சொல்லியிருக்கிறாராம். மேலும், ‘வம்பு’ நடிகர் தன்னிடம் பழைய உரிமையுடன் பேசிப் பழகுவதற்கும் அவர் தடை விதித்துள்ளாராம். ‘ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவேன், நடிப்பேன், போவேன். பட சம்பந்தமான புரமோஷனுக்கு கண்டிப்பா வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்ட அவர், தன் உதவியாளர்களிடம் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டை கண்கொத்திப் பாம்பாக கவனிக்க வேண்டும் என்று கறாராகச் சொல்லியிருக்கிறாராம்.

‘ரொம்ப உசரமா, ஒட்டகம் மாதிரி வளர்ந்திருக்காரு’ என்று லேட்டஸ்ட்டாக சிலர் கமெண்ட் அடித்ததை தன் காதில் வாங்கிக்கொண்ட ‘அனுஷ்க’ நடிகை, ‘நான் ரொம்ப உசரம்னு இத்தனை நாளா இவங்களுக்கு தெரியலையா? இப்ப எதுக்கு இப்படி கமெண்ட் அடிச்சு, என் மனசை காயப்படுத்தறாங்க?’ என்று கேட்டு, கண்கலங்கு கிறாராம். ‘செகண்ட் வேர்ல்ட்’ படம் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் சரியாகப் போகாத நிலையில், நடிகையை மட்டம் தட்டிப் பேசுவதற்காகவே இப்படியொரு மேட்டரை எதிர்கோஷ்டியினர் கையிலெடுத்து இருக்கின்றனர் என்று நடிகையின் அபிமானிகள் சொன்னாலும், தன் உயரம் குறித்து சினிமா வட்டாரத்தில் பேசப்படும் கமெண்டு களால், உண்மையிலேயே அவர் வருத்தத்தில் மூழ்கியிருக்கிறாராம்.

‘இதயத்தை திருடியவன்’ படத்திலும், ‘மச்சமுள்ள ஆளு’ என்று சொல்லும் படத்திலும் நடித்திருக்கும் மும்பை வரவு ‘மலானி’ நடிகை, தன் மனம் கவர்ந்த பெங்களூர் மணாளனை செப்டம்பரிலேயே ரகசிய கரம் பிடித்து செட்டிலாகி விட்டாராம். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் டோலிவுட்டில் புதுப்பட வாய்ப்பு கிடைக்காது என்று பயந்த அவர், திருமணத்துக்கு நெருங்கிய வட்டாரத்தைத் தவிர வேறு யாரையும் அழைக்கவில்லையாம். இப்போது அவரது போட்டி நடிகை ஒருவர், இந்த விஷயத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

இப்போது எந்த விழாவுக்கு வந்தாலும், தன் தொப்புள் அழகு தெரியும்படி உடையணிந்து வந்து ‘கிக்’ ஏற்றுகிறார், ‘யாதவ மனீ’ நடிகை. அப்படியாவது தன்னை யாராவது கவனிப்பார்களா என்ற நப்பாசைதான் காரணம் என்றாலும், இதுபோல் கவர்ச்சி உடையணிந்து தரிசனம் கொடுத்த எத்தனை நடிகைகளுக்கு புதுப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதும் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயம். இப்படி வருவதால், மீடியாவின் கவனம் வேண்டுமானால் நடிகையின் பக்கம் திரும்புமே தவிர, அவரது தொப்புள் அழகைப் பார்த்தா புதுப்பட வாய்ப்பு கொடுக்கப் போகிறார்கள்? அம்மணிக்கு அட்வைஸ் சொல்பவர்கள் அருகில் இருந்தால், இந்த விஷயத்தையும் அவரிடம் சொல்லிவிடலாம்.

‘ஆண்ட்ரிய’ நடிகைக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரிகிறதாம். பொதுவாகவே அவருக்கும், பப்ளிக் ரிலேஷனுக்கும் ஏழாம் பொருத்தம். அம்மணிக்கு யாரிடமும் பேசவும் பிடிக்காது, பழகவும் பிடிக்காது. சில ஹீரோக்களையும், சில ஒல்லிப்பிச்சான் இசையமைப்பாளர்களையும் மட்டும் பெரிதாக நம்புவார். அவர்களும் அம்மணியை நேரம் பார்த்து கவிழ்த்து விடுவார்கள். உடனே யாரிடமும் பேசாமல், தனக்குத்தானே தண்டனை விதித்துக்கொண்டு அமைதியாகி விடுவாராம். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும்

அம்மணியைப் பற்றி பரபரப்பு விஷயங்கள் வெளியாகும். அதற்கு பதில் சொல்ல விரும்பாமல், மீண்டும் நத்தைக் கூட்டுக்குள் ஒளிந்துகொண்டு, தன்னைப் பற்றி யார், என்ன பேசுகிறார்கள் என்று உளவு பார்ப்பாராம். இப்படி தனக்குள்ளேயே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவர், ‘கவுன்சலிங்’ செல்லலாமா என்று யோசிக்கிறாராம்.

பொம்மலாட்டத்திலும், தாண்டவ ஆனந்தத்திலும் நடித்த பெங்களூரு நடிகை அவர். தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார். பிறகு இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடிவு செய்து, சில மாதங்களுக்கு முன் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இந்த விஷயம் கோலிவுட்டுக்கு தெரியவே ஓரிரு மாதங்களாகி விட்ட நிலையில், அவரை ஒருவர் தொடர்புகொண்டு, ‘உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சாமே?’ என்று கேட்டபோது, டொக்கென்று போனை வைத்து விட்டாராம். ‘திருமணம் என்பது என்னுடைய பெர்சனல் மேட்டர். அதைப்பற்றி விசாரிக்க யாருக்கும் உரிமை கிடையாது’ என்று சொல்லிவிட்டாராம்.