நடிகைகள் பெயரில் போலிகள்



கேரள இறக்குமதியான ‘தேன்ரோஜா’வுக்கு தமிழில் ஒரு படமும் கைகொடுக்கவில்லை. ‘இளைய தளபதி’யின் தம்பிக்கு ஜோடியாக நடித்த ‘பர்ஸ்ட் ட்ரீம்’ படம் ஓடவில்லை. அடுத்து, ‘ஜீவ’ நடிகருடன் நடித்த ‘லைன் டைகர்’ படமும் அவருக்கு உதவி செய்யவில்லை. காரணம், இதில் அவரது பெரும்பாலான காட்சிகள் வெட்டப்பட்டு, டம்மி நடிகையாக்கப்பட்டார். இப்போது ‘காந்தர்வ’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்துக்கு வராமல் இழுத்தடித்து, படக் குழுவினரின் மனதை நோகடித்துள்ளார்.


இன்னொரு படம், ‘கட்டுமல்லு’. இதில் நடிகைக்கு அற்புதமான கேரக்டர்தான் என்றாலும், படம் ரிலீசாகுமா என்று இதுவரை தெரியவில்லை. இதையடுத்து, அம்மணியை ‘ராசியில்லாத நடிகை’ என்று வர்ணித்து, கோலிவுட்டில் புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்ய பெரிதும் தயங்குகிறார்களாம்.

ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்கும் பல நடிகைகள், ‘அதெல்லாம் எங்களுக்கே தெரியாம ஆரம்பிச்சிருக்காங்க. ஆடியன்ஸ் அதை நம்பி ஏமாற வேண்டாம்’ என்று அடிக்கடி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். என்றாலும், ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், மேலும் சில ஹீரோயின்கள் பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொண்டிருக்கிறார்கள் விஷமிகள். இப்போது ‘ல.மேனன்’ பெயரிலும் ஒரு அக்கவுண்ட் உலவிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி நடிகையிடம் கேட்டால், ‘அந்த அக்கவுண்டுக்கும், எனக்கும் துளிகூட சம்பந்தம் இல்ல. ப்ளீஸ், பேஸ்புக்ல இருக்கிறது நான்தான்னு நம்பி ஏமாந்துடாதீங்க’ என்று கெஞ்சுகிறார்.

ஒவ்வொரு முறையும் ரஜினியின் புதுப்படம் தொடங்க இருக்கும் நேரத்தில், அப்படத்தை ‘குமார ரவி’ இயக்குகிறார் என்பதாக மீடியா எழுதிக் குவிக்கும். இதையறிந்த கொதிக்கும் அந்த இயக்குநர், ‘நான் இல்ல... நான் இல்ல’ என்று மறுத்து அறிக்கை விடுவார். இம்முறையும் அப்படித்தான். ‘சடையான்’ ரிலீசுக்குப் பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ நடிகர், அந்த இயக்குநரின் படத்தில்தான் நடிக்கிறார் என்பதாக தகவல்கள் வருகின்றன. இதையறிந்து டென்ஷனான ‘குமார ரவி’ இயக்குநர், ‘என் அடுத்த படத்துல ‘நான் ஈ’ வில்லன் நடிகர் ஹீரோ. கன்னடத்துலயும், தமிழ்லயும் டைரக்ட் பண்றேன்’ என்று, வதந்திகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

‘ஒளி’யிலிருந்து டைரக்ஷனுக்கு தாவி ஹிட் படங்கள் கொடுத்த ‘ஆனந்த’ இயக்குநர், இப்போது ‘ஒல்லிப்பிச்சான்’ ஹீரோ நடிக்கும் ‘..கன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த ஷூட்டிங்கில் ஒரு பாடல் காட்சியை குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் படமாக்கி தன்னை பெண்டு நிமிர்த்தி விட்டார் என்று, இயக்குநரிடம் ஹீரோ கடுமையாக சண்டை போட்டதாகவும், இதனால் அவர்களிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி பரவியது. விசாரித்தால், படத்தின் விளம்பரத்துக்காக இப்படியொரு தகவலை பரப்பி வருவதாக தெரிந்து கொள்ள முடிந்தது. இனி படப்பிடிப்பில் மோதல், நட்சத்திரங்களுக்குள் காதல் என்ற செய்திகள் வந்தால், அதை ‘பில்ட்-அப்’ செய்தி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

‘அழகிய லைலா’வுக்கு ஆடிய ‘தொடையழகி’ நடிகை, கணவர் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் சந்தோஷ வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார். அவரை மீண்டும் நடிக்க பலர் அழைப்பு விடுத்த நிலையில், மனசு கொஞ்சம் மாறியிருக்கிறாராம். தானாக வரும் வாய்ப்பு, சம்பளமும் அதிகம். பிறகு ஏன் மறுபடியும் திரையில் நடிக்கக்கூடாது என்று தனக்குள் கேள்வி கேட்ட நடிகை, அடுத்த மாதம் இந்தியாவுக்கு வந்த பிறகு தன் மறுபிரவேசம் குறித்து அறிவிக்க முடிவு செய்துள்ளாராம். இனி அவரை இளம் ஹீரோக்களுக்கு அக்கா அல்லது அண்ணி வேடங்களில் பார்க்கலாம் என்கிறார்கள். அதோடு, டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அம்மணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

‘கார்த்திகேயசிவ’ ஹீரோ தனக்கு யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறாராம். தன்னிடம் கதை சொல்லும் இயக்குநரின் பார்வைக்கு அந்த லிஸ்ட்டை கொண்டு செல்வாராம். ‘நான் கதை கேட்கிறேன். பிடிச்சிருந்தா, சம்பளம் பேசறேன். அதுக்கு சரிப்பட்டு வந்தா, கால்ஷீட் கொடுத்து நடிக்கிறேன். ஆனா, எனக்கு ஜோடியா குறிப்பிட ஹீரோயினை நடிக்க வைக்கணும்’ என்கிறாராம். அதற்கு சில இயக்குநர்கள் உடன்பட்டு, ‘ஹீரோயின் செலக்ஷன் விஷயத்தை உங்ககிட்டயே விட்டுடறோம்’ என்று நழுவி விடுகிறார்களாம். இப்போது ‘..கராத்தே’ படத்தில் ‘ஹன்ஸ்’ நடிகையை ஜோடியாக்கி அழகு பார்க்கும் நடிகர், அடுத்தடுத்த படங்களில் ‘தமன்’, ‘நயன்’, ‘ஸ்ருதி’ என்று முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர வியூகம் வகுத்துள்ளாராம்.

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் பிசியாக இருந்தார். அப்போது மல்லுவுட், சான்டல்வுட் ஏரியாக்களில் தேடி வந்த வாய்ப்புகளை எட்டி உதைத்தார். ‘சரியான நேரம் வரும். அப்ப பார்த்துக்கிறோம்’ என்று, அந்த ஏரியாக்களில் இருக்கும் இயக்குநர்கள் சாபம் கொடுத்தார்களோ என்னவோ, இப்போது ஒரு சான்டல்வுட் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் ‘3ஷா’ நடிகை. காரணம், அம்மணிக்கு மவுசு இல்லை. எல்லாம் குறைந்து விட்டது. அவரும் பத்து வருடங்களுக்கு மேலாக ரசிகர்களுக்கு தீனி போட்டுக்கொண்டு இருக்கிறார் என்றாலும், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற விதிக்கு ஏற்ப, புதுப்புது நடிகைகளை ரசிக்க ஆடியன்ஸ் தயாராகி விட்டனர். இந்நிலையில், தேடி வந்த கன்னட வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட நடிகை, சம்பளத்தை கணிசமாக குறைத்து வாங்கியிருக்கிறாராம். அதாவது, சான்டல்வுட்டுக்கு ஏற்ப.

மூன்று வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல், சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த ‘பிஷ்ஆட்சி’ நடிகைக்கு ஹார்மோன் கோளாறோ என்னவோ, உடம்பு புசுபுசுவென்று எடை கூடிவிட்டது. இதனால் அவதிக்குள்ளான அவர், எப்படி உடல் எடையைக் குறைப்பது என்று தெரியாமல் அழுதாராம். உடனே ஒரு டயட்டீஷியனிடம் பேசிய அவர், தகுந்த ஆலோசனை பெற்று உடற்பயிற்சியில் ஈடுபட்டாராம். மேலும், அதிக நொறுக்குத்தீனி சாப்பிடுவதை அறவே நிறுத்தி ஒரே வாரத்திற்குள் பல கிலோ குறைத்துள்ளாராம். இதையடுத்து கோலிவுட்டில் இரண்டு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர், ‘இனி ஷூட்டிங் ஸ்பாட்டில் நொறுக்குத்தீனி சாப்பிட மாட்டேன்’ என்று சத்தியம் செய்துள்ளாராம்.

ஒரு புதிய தமிழ்ப் படத்தில், ‘வம்பு’ நடிகர் மறுபடியும் தன் முன்னாள் காதலி ‘தாரா’வுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது, நடிகரின் புதிய காதலி என்று வர்ணிக்கப்படும் ‘ஹன்ஸ்’சுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். அதனால்தான் அவருடனான நட்பை துண்டித்துக்கொள்ள ரெடியாகி விட்டதாக கோலிவுட் மற்றும் டோலிவுட் ஏரியாவில் செய்தி பரவியுள்ளது. இதற்கிடையில், நடிகருடன் தன் மகள் நெருக்கமாக இருப்பதையும், அவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதையும் அறவே வெறுத்துள்ள நடிகையின் தாய்க்குலம், மகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்கொத்திப் பாம்பாக கவனித்து வருகிறாராம்.

ஒவ்வொரு படத்தின் புரமோஷனுக்கும் அதில் நடித்த நடிகர், நடிகைகள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கோலிவுட்டில் பலமாக எழுந்துள்ளது. இதையடுத்து ஆந்திர, கேரள, கர்நாடக ஏரியாக்களில் இருந்து தமிழகத்தை நாடி வரும் பல புது, பழைய ஹீரோயின்கள், ‘நாங்க படத்துல நடிக்கிறதுக்கு மட்டும்தான் சம்பளம் வாங்கறோம். புரமோஷன் அது இதுன்னு கூப்பிட்டா, அதுக்கு தனி பேமண்ட் வேணும்’ என்று கேட்டு அடம்பிடிக்கிறார்களாம். ‘கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகி விட்டதே’ என்று புலம்பும் சிலர், அவர்கள் கேட்கும் விஷயத்துக்கு என்ன பதிலடி கொடுப்பது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

(படத்தில் இருக்கும் நடிகைகள் ரூபி அஹமத், மதுரிமா,  தனிஷ்கா, ஜென்னி ஆகியோருக்கும் இந்தச் செய்திகளுக்கும் தொடர்பில்லை)
- மாயன்