திருமண், உடலுக்குக் காப்பு!



வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங் களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன்; ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும். திருமண்ணோடு ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்வதும் மரபு.

ஸ்ரீசூர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும். இந்த திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது. எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் தன்னைத் தரித்துக் கொள்பவரின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறது. திருமண், ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களே; என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவதே வைணவம் உணர்த்தும் தத்துவம்.

வராஹ அவதாரத்தின் போது, மகாவிஷ்ணு வெள்ளை வெளேரென்று உள்ள தன் பற்களால் உலகையே தூக்கி நிறுத்தினார். அவருடைய பற்கள் பட்ட இடங்களில் `ச்வேத மிருத்திகை’ எனும் வெள்ளை மண்கட்டிகள் உருவானதாம். அதைப் போன்ற வெள்ளை மண்ணை, ‘திருமண்’ என்று வைணவர்கள் நாமமாகப் போட்டுக் கொள்கிறார்கள். வைணவர், சைவர், மாத்வர் அனைவருமே நெற்றியில் மட்டுமின்றி, மார்பு, வயிறு, புஜங்கள், மணிக்கட்டு முதலிய இடங்களில், நாமமோ, விபூதியோ, சந்தனமோ இட்டுக் கொள்வார்கள்.

நாராயணனின் பன்னிரண்டு நாமாக்களை குறிக்கும் வகையில் பன்னிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக்கொள்வது இவர்கள் சம்பிரதாயம். உடலின் அந்தந்த இடங்களில் திருமண் இட்டுக்கொள்ளும்போது பெருமாள் நாமங்களைச் சொல்வது மரபு:
‘கேசவாய நம’ என்று சொல்லி நெற்றியிலும்,
‘நாராயணாய நம’ என்று சொல்லி நாபியிலும்   (நடு வயிறு),
‘மாதவாய நம’ என்று மார்பிலும் (நடு மார்பு),
‘கோவிந்தாய நம’ என்று நெஞ்சிலும்
  (நடுக்கழுத்து),
‘விஷ்ணவே நம’ என்று வலது மார்பிலும்,
‘மதுசூதனாய நம’ என இடது மார்பிலும்
‘த்ரிவிக்ரமாய நம’ என்று வலது கையிலும்,
‘வாமனாய நம’ என்று வலது தோளிலும்,
‘ஸ்ரீதராய நம’ என்று இடது கையிலும்,
‘ஹ்ருஷீகேசாய நம’ என்று இடது தோளிலும்,
‘பத்மநாபாய நம’ என்று பின்புறம் அடிமுதுகிலும்,
‘தாமோதராய நம’ என்று பிடரியிலும்
தரித்துக் கொள்வது வழக்கம்.

- ப.பரத்குமார்